ஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்




வலியிருக்கிறதா
எனக்கேட்கிறார்கள்
இருக்கிறதெனப்
பதிலுரைக்கிறான்
எப்படி வலிக்கிறதென
வினவுகிறார்கள்
சொல்லத் தெரியவில்லை
ஆனால் கடுமையென்கிறான்
சொன்னால்தானே புரியுமென
நெருக்கடிக்கிறார்கள்

வலி மின்னும் பகுதி
ஒரு கனத்த தேன்கூடு போன்றும்
அடை மொய்க்கும்
ஆயிரமாயிரம்
தேனீக்களின் தீண்டலாய் வலி
மின்னுகிறதென்கிறான்.

உடனடியாக பேச்சு
தேனீக்கள் குறித்தும்
அதன் மருத்துவ குணம் குறித்தும்
தேனின் தரம் குறித்தும் தாவுகிறது.
ஒருவன்
தேனீக்களின் உயிரியல் பெயர்
என்னவெனக் கேட்டிருக்கிறான்
அவனும் இணைந்து
யோசித்துக்கொண்டிருக்கிறான்.

எல்லோருக்குமினிய கனியன்

பிணைந்திறுகும் பித்துகவிதைக்கு பேரன்பிற்குரிய
ஆசான் அறிவழகன் அவர்களின் பார்வை.
*


எல்லோருக்குமினிய கனியன்
-------------------------------------------
பொதுவாக எழுத்தின் பரிமாணம் என்பது எண்ணத்தின் பரிணாம வளர்ச்சி தானே?... அது
மனநில விதை முளைப்பை கடத்தி வெவ்வேறு
வசதியான தளங்களில் நடுவது என்றே நான் நோக்குகிறேன். எழுத்தின் பரிமாணங்கள் எதுவாக இருப்பினும் கவிதை
என்ற பரிமாணம் மனையாளின்,காதலியின்
அணைப்பில் கிடைக்கும் வெப்ப மூச்சுக் காற்றாய் நமைக் கிளர்ந்தெழச்செய்வது.
உங்கள் கவிதைகளுக்கு நான் ஒரு கலாபக் காதலன்.உங்கள் பதங்களை நான் சுகித்து உன்னிப்பாக அவதானித்தே வருகின்றேன்.

அப்படியே போகிற போக்கில் இசைக் குறிப்புக்களை இசைஞர்களுக்கு ராஜா
வழங்கிச் செல்வது போல் உங்கள் மொழி அந்த ராஜ இசையின் லாவகத்திற்கு இணையாக உங்கள் எண்ணத்தோடு கூடிக் கலவி ஒரு உன்னதத்தையே சிருஷ்டிக்கிறது.
சாதாரணமாய் படித்தால் நீங்கள் மெனக் கெட்டது போலிருந்தாலும்,சரளமாய்,
சுழிப்பாய்,பிரவாகமாய்,துள்ளலாய் உங்கள்
மொழி அள்ளிப் பருகும்,அள்ளி தலைக்கு மேல்
தெளித்துக் கொள்ளும் தீர்த்தம் போல்.

ஆஹா!...
".... வீசியெறியும் வெளிச்சத்தில் ஓவியங்கள் தீட்டுதல்...."
என்ற பதத்தில் கும்மியடிக்கும் அயோக்கியத்தனத்தில்,யோக்கியத்தை பிரித்தெடுப்பது போல்...இதற்கு ஒரு உன்னதமான மனநிலை வேண்டும்.எப்படி பெற்றீர்கள் இதை?..
".... இசைமணிகளைப் பிரித்து மாலையாக்கி
ஆட்காட்டி விரலில் மாட்டிச் சுழற்றுகிறான்..."
என்ன ஒரு தவ மனநிலையிருந்தால் இப்படி
வரிகள் எமை ஆளும்?..ராஜாவின் விரலசைவில் நமை ஆளும் உன்னத சங்கீதம் எழுவது போல இதுவும் ஒரு ராஜ பூபாளம்.
நானும் தான் பார்க்கிறேன்.யோசிக்கிறேன்.
நிலாகிட்ட எனக்கு இப்படி பணியத் தெரியலியே.அந்த பணிவு நிலாவே மோகிக்கும் பதங்கள்.
"...... வேலங்குச்சி நான் வளச்சு
வில்லு வண்டி செஞ்சு தாரேன்
வண்டியில வஞ்சி வந்தா
வளைச்சிக் கட்டி கொஞ்ச வாரேன்....."
என்ற அற்புதக் கலைஞன்,கவிஞன் R.V.உதயக்குமார் என்னுள் ஊற்றாய்ப் பீறிக்
கொண்டு வந்தான் நீங்கள் எரிந்து விழுந்த நட்சத்திரப் பாதையில் பயணம் போக வேப்பமரக் கிளையுடைத்து ஏணி செய்ய பிரியப்படும் போது. கதிர்!... நீங்க யாரு?..
என்ன வாங்கி வந்திருக்கிறீர்கள்?.எப்படி?.. இந்த பரபரப்பில் இப்படி?.. என்ன விதமான பக்குவம் உம்மிடம்...நினைப்பதையெல்லாம்
படைக்கும் சரஸ்வதி வரம்,குரு கடாட்சம் உங்கள் மேல் அபரிமிதமாய்.வேப்ப மரக்கிளை ஏணியில் ஏறிச் செல்வது சத்தியமாய் சாத்தியம் தான்.இப் பதத்தில்
நான் மேலும் பதமானேன்.

"..... பிரபஞ்சத்தின் செல்ல மகவாய்...."
நாம் இதற்குள் அடக்கம் என்ற தன்னடக்கம்.
"..... உலகையாளும் பேரரசனாய்....."
யப்பா!... காட்டுகிறீர்களே ரூபம்...விஸ்வரூபம்..
அடுத்து சட்டுன்னு குழந்தையாய் பால்யமடைகிறீர்களே...அப்படியே
உங்களை
மகனாய் இரு கைகளிலும் ஏந்தி,இரு தோள் சாய்த்து,தட்டிக் கொடுத்து,"... கண்ணே!.. கலைமானே!..." என்று பாட வேண்டும் போலுள்ளது.பொக்கிஷம் நீ... உனக்குத் தேவை நல்லவர்களின் தாலாட்டு...என் தாலாட்டு இதை பிரசவித்த விரல்களை நீவி
தடவி சொடக்கு எடுப்பது...இது நான் உனக்களிக்கும் வெகுமானம்.உனக்கு தாலாட்டுப் பாட இன்னும் வருவார்கள்.
நல்லூழ் என்று சொல்வார்களே...நல்லுழலுதல்
என்று சிலாகிப்பார்களே... மேற்கண்ட நம்மைப்
பிணைத்துள்ள அழகியல் தளைகளை தள்ளிவிட்டு, உதறிவிட்டு நம்மால் வானேக முடியுமா கதிர்?... நம்மை நாமே காதலிக்கும்,
நம்மைப் போல பிறரைக் காதலிக்கும் யோக மனநிலை வாய்த்தவருக்கு அது பிணைந்திறுகும் மாயக்கயிறு.சிறகடித்துப் பறக்கும் மாயவெளி.விரும்பிச் செல்லும் மாயத்திசை.நீ..மாயன்.
பதங்களை ஒவ்வொன்றாய்ப் பதம் பிரிக்க
என் மென்முக்குகளை தொட்டுத் தடவி மேலும்
புதுப்பித்து உயிர்ப்பிக்கிறாய்..என் நாளமிலா
சுரப்பிகளில் தேனாய் சுரக்கிறாய்.நான் தேடும்
உன்னதத்தில் நானும் உன்னதம் தான் என்று என் முன் வந்து உன்னை ஏந்திக் கொள் என்கிறாய்.சின்ன சின்ன நாசூக்கான இழைகளில் உலகை விலை பேசுகிறாய்.நான் காதலித்துக் கொண்டிருக்கின்றேன் உன்னை...உன் ஆளுமையை...
இதை எழுத,எழுத...மகேந்திரனின் 'கண்ணுக்கு மை எழுது'படத்தில் ராஜா பாடும் இப்பாடல்
எனை இன்பமாய் இம்சிக்கிறது.
"....பூவே!.. நீ நானாகவும்...
நீயும் என் தோளாகவும்....ஆசை..
அது ஈடேறட்டும்...எந்தன் கை கூடட்டும்..
இது என் ஆசைகள் இங்கு அரங்கேறட்டும்..
வண்ணப் பூவே!... நீ நானாகவும்...
நீயும்...என் தோளாகவும்....
வாழ்வென்பது....
வாடும் பூங்காற்றில் பூப் போன்றது...
பூவென்பது ...
நாளை எண்ணாமல் கூத்தாடுது....
பூ பூத்ததும் அது பிஞ்சாகுது...
பிஞ்சானதும் அது காயானது...
அந்தக் காயும்....அது கனியானது...
அது போல் தான் மனம் வளர்கின்றது...
என் வாழ்க்கையும் அது போலானது...
பூவே!... நீ...நானாகவும்...
நீயும்...என் தோளாகவும்......ஆசை......"
இப் பாடலுக்குப் பொருத்தமானவன் நீ...
நீ...ஒரு மானுடக் கனி...எவருக்குமினிய கனியன் நீ...என்றும் நிற்கும் பூங்குன்றன் நீ...
வாழிய கதிர்!!.... வாழிய பல்லாண்டு!!!....
ஜீவிதமான இலக்கியம் போல்....
உயிரமுது போன்ற கவிதை போல்...
என் எழுத்து வழியாய் நான் இளைப்பாற உன்
மடி தந்ததற்கு நன்றி....உன்னைத் தொழ
எனக்கு சங்கோஜமில்லை...வணங்குகிறேன்..
- சண்முகம் அறிவழகன்
06.05.2018
தாளவாடி.
-
அவர் எத்தனைதான் கவிதைக்காக எழுதினேன் எனச் சொன்னாலும், நான் அதை மறுத்து என் மீதான அன்பிற்காக கனிந்த சொற்களென்றே ஏற்கிறேன்.

இன்னும் சொல்லப்போனால் நாங்களே அந்த பித்தன்

சொற்களில் சிக்கிக் கொண்டு தவிப்பதென்பது சாதாரண வதையல்ல. அது விவரிக்க முடியா சுக வதையெனினும் சற்று கொடும் வதை. நான் எழுதிய “பிணைந்திறுகும் பித்து” எனக்கு விடுதலையாய் அமைந்திருக்க, அது ஆனந்தன் அவர்களுக்கு சிறைப்படுத்தும் களமாய் அமைந்திருக்கிறது.



எனக்கு பின்னிரவை நெருங்கும் தருணமென்றாலும், சிங்கப்பூரிலிருக்கும் அவருக்கு அது நள்ளிரவு. சொற்களில் சிக்கிக் கொண்டு தூக்கம் வரலையே கதிர் எனும் அவரின் குரல் எனக்கு அதீத மகிழ்ச்சியைத் தந்தாலும், அதன் நடுவே ஒரு மென் வலி தந்தது. எழுத்து என்பது இறக்கிவைப்பதென்றாலும், இன்னொருவருக்கு அதீத கனம் கூட்டுவதில் ஏற்படும் வலி அது. ஆனாலும் அந்த வலியை கலந்திறுகும் எண்ணக் குவியல்களோடு பெரும் பாராட்டாய் என் கைகளில் ஏந்திச் சுமக்கிறேன்.
எங்களுள் இருந்தது அந்த பித்தனின் மனம். இன்னும் சொல்லப்போனால் நாங்களே அந்த பித்தன்.
ஆயினுமென்ன... நல்லா இருப்போம்.
*
பிணைந்திறுகும் பித்திற்கான ஆனந்தனின் விமர்சனம்
...
இன்னும் “save post” செய்து நிரும்பத்திரும்பப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

என்னனைப்பாதித்தென்பதின் மேலாக ஒவ்வொரு வரியும் காட்டும் நிறப்பிரிகை அலதியானது.

உங்கள் ஆகச்சிறந்த “abstract” வரிகள் என்றே இதை அடையாளப்படுத்த
விரும்புகிறேன். இந்த பித்து என்னைப் பிணைந்திறு(ரு)க்கும்
...
“கடந்தேகும்” வாகனங்கள் !!! தூக்கம் வரலயே கதிர்.
...
"கடந்தேகும் வாகனங்கள் ", "இசை மணிகளைப் பிரித்து", இந்த இரண்டு வரிகளையும் என்னால் கடந்த ஒரு மணி நேரமாய் தாண்ட முடியவில்லை.
பொதுவாக வரிகளின் எழுதுபொருளை விடுத்து உவமைகளில் சிக்கிக்கொள்ளாமல் என்னை பாதிக்கும் சம்பவத்தோடு பொருத்திக்கொள்வது என் வழக்கம்... அது சரியோ அன்றோ, அதுவே என் வழக்கம்...
"கடந்தேகும் " என்னும் வார்த்தையை எனனால் கடக்க முடியவில்லை.. பெரியபுராணம், சிவபுராணம் இரண்டையும் புரட்டிப்பார்த்தேன்.. 'எகும்' என்பதற்கு எந்த பிரதிபலனும் இல்லாமல் சார்ந்திருப்பது என்றெய் பொருளாக விழைகிறேன். "பூக்கள் எல்லா இடத்திலேயும் பூக்கிறது, அதை மனிதன் பார்க்கும்பொழுது தன்னைக்காகவேய போகிறது என்றனரும் அழகியலைப் போன்றே, " இருளைப் பிய்த்து;கடந்தேகும் வாகனங்கள்;வீசியெறியும் வெளிச்சத்தில்" ஒவ்வொருவரும் அவரவருக்கான ஓவியங்களைத் தீட்டுகிறோமோ ?
"ஓசைகளிலியிருந்து இசை மணிகளைப் பிரித்து" - அடடா, ஆஹா, என்னதொரு அனுபவம்... ஓசை இசையாவது அனுபவிக்கத்தெரிந்ததால் மட்டும்தானே... ஆட்காட்டிவிரலிலே சுற்றும் பரந்தமானன்றி வேறு எந்த மனோநிலையில் அதை அனுபவிக்கமுடியும் ? அதுவும், " வேப்ப மரக்கிளையுடைத்து; ஏணி செய்யப் பிரியப்படுகிற" ஒரு மறவனன்றி வேறுயாரால் முடியும் அது. .. "உலகையாளும் பேரரசனாய்" இருந்த தனி மனிதனும், " பிரபஞ்சத்தின் செல்ல மகவாய்" இருக்கக்கடந்தவன் தானே...
இதுவாகிலும் கண்சிமிட்டுகையில் இன்னும் பிணைந்திருகிப் போகாததில் மாயமொன்றும் இல்லை இந்த "அவனுக்கு".
பொதுவாக, நான் பெரிய விமர்சனங்கள் எழுதுவதில்லை, என்னை பெரிய அளவில் பாதித்தாலும்; ஆனால் , இன்று உறக்கம் வருவது எனக்கு "விரலில் சுழலும் இசை"தான்......
குறிப்பு : "ஒவ்வொரு படைப்பிலக்கியமும், தன்னைத்தானே புதிப்பித்துக்க்கொள்ளும், வாசகனை அவனுக்கான தளத்தின் பரிமாணத்தில்... " - ஜெ.மோ. வின், 'விஷ்ணுபுரம்' முன்னுரையை நினைவுபடுத்திக்கொள்கிறேன் ...
-
கவிதை : பிணைந்திறுகும் பித்து - ஈரோடு கதிர்
-
பேரன்பும் நன்றிகளும் ஆனந்தன்.
பி.கு: இனி நான் தொடர்ந்து கவிதைகள் எழுதி ஏதேனும் பின் விளைவுகள் ஏற்பட்டால் அதற்கு நீங்களே பொறுப்பு ;)

பிணைந்திறுகும் பித்து




சாலையோரம் நின்று
இருளைப் பிய்த்து
கடந்தேகும் வாகனங்கள்
வீசியெறியும் வெளிச்சத்தில்
ஓவியங்கள் தீட்டுகிறான் அவன்

வாகன ஓசைகளிலிருந்து
இசை மணிகளைப் பிரித்து
மாலையாக்கி
ஆட்காட்டி விரலில் மாட்டிச்
சுழற்றுகிறான்

வளர்ந்தும் தேய்ந்தும்
வந்தும் வராமலும்
போகும் நிலவிடம்
கவிதைகள் சில சொல்லி
அருகில் வரப் பணிக்கிறான்

எரிந்து விழும் நட்சத்திரங்களின்
பாதையில் பயணம் போக
வேப்ப மரக்கிளையுடைத்து
ஏணி செய்யப் பிரியப்படுகிறான்

பிரபஞ்சத்தின் செல்ல மகவாய்
உலகையாளும் பேரரசனாய்
தன்னைப் பாவிக்குமவன்
மிரண்டோடும் குழந்தைகளின்
பாத அடிகளில்
பால்யத்தைக் கண்டெடுத்துச்
சிலிர்க்கிறான்

அவனுக்கும் ஆசை வரும்
பித்து மனநிலைவிட்டுப்
பிரிந்து விட்டாலென்ன!
 
பாதியில் நிற்கும் ஓவியமோ
விரலில் சுழலும் இசையோ
நிலவோ நட்சத்திரமோ
மழலையின் பாதச்சுவடோ
கண் சிமிட்டுகையில்
பிணைந்திறுகிப் போகாதோ பித்து!