நமக்குக் கொடுக்கப்பட்டது ஒரே ஒரு வாழ்க்கை

அதுவொரு துண்டுக் காணொளிக்காட்சி. மங்கலாகத்தான் தெரிகின்றது. வெளிநாட்டு ரயில் நிலையம் ஒன்றில் ஆண் ஒருவர் கைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார். கோபத்திலோ, இயலாமையிலோ கையில் இருக்கும் பையினை தூக்கி அடிக்கிறார். உச்சகட்டப் பதட்டத்தில் இருக்கிறார் என அவரது நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. அதைக் கவனித்தபடியே இருவர் கடந்து போகின்றனர். கோபத்தில் மீண்டும் மீண்டும் கைபேசியில் கத்துவது புரிகிறது. கடந்துசென்ற இருவரில் பெண்போல் தோற்றமளிப்பவர், கோபத்தில் பேசிக்கொண்டிருப்பவரையே திரும்பிப் பார்த்தபடி தம் அருகில் இருப்பவரிடம் ஏதையோ சொல்லிக்கொண்டு செல்கிறார். ஒருகட்டத்தில் அவ்விருவரும் நின்று விடுகிறார்கள். இவர் கையில் இருந்த கைபேசியையும் தூக்கி வீசி சிதறடித்துவிட்டுக் குமைந்து உட்கார்கிறார். அந்தப் பெண் அவரை நோக்கி நகர ஆரம்பிக்கிறார்.   கற்பனை செய்ய முடியாத வேகத்தில் தண்டவாளத்தில் ரயில் சீறி வரவும், உட்கார்ந்திருந்த நபர் ரயிலை நோக்கிப் பாய்கிறார். ஓடிவந்த அந்தப் பெண் அவர் ரயிலுக்குள் விழுவதற்கும் முன்பாக இழுத்து வெளிப்புறமாகத் தள்ளிவிடுகிறார். ஒரு மைக்ரோ நொடிப் பொழுதுதான். மரணம் தோற்றுவிட்டது. உயிரும், மிச்சமிக்கும் வாழ்க்கையும் கிடைத்தற்கரிய பரிசுபோல் அப்படியே கையில் மீந்து நிற்கின்றன. ஆமாம், இன்னொரு பிறப்பெடுத்தாகிவிட்டது.

இரண்டு வார காலத்திற்குள் என்னிடம் நான்கு பேர், வாழ்வதன் மேல் கொண்ட அயர்ச்சியில், வாழ்க்கை தரும் மிரட்சியில் குமைந்துபோய் தற்கொலை எண்ணம் தலை தூக்குவதாகச் சொல்லிவிட்டார்கள். நாற்பதுகளில் இருக்கும் ஓர் ஆண், முப்பதுகளில் இருக்கும் இரண்டு பெண்கள் மற்றும் இருபது வயதை நெருங்கும் ஒரு மாணவன்.  அவர்களைச் சூழ்ந்த எண்ணத்தின் பின்னால் வறுமையோ, பொருளாதார இழப்போ, நோய்க் கொடுமையோ, உறவுகளின் அருகாமைக் குறைவோ இல்லை. அனைவருக்கும் குடும்ப, சமூகப் பிணைப்பு மிக பலமாகவே உள்ளன.

முதல் மூவருக்கும் கல்வி பயிலும் பிள்ளைகள் இருக்கின்றார்கள். நான்காமவரை நம்பி தாய், சகோதரி இருக்கிறார்கள். எல்லோருக்கும் பெருங்கடமைகள் கைகளில் கனத்துக் கிடக்கின்றன. ஏதோவொரு அற்பக் கணத்தில் இவர்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டால் பிள்ளைகளின் வாழ்க்கை, குடும்பத்தின் எதிர்காலம் உள்ளிட்ட அனைத்துமே சபிக்கப்பட்டதாகிவிடும். ஆனாலும் தயக்கமே இல்லாமல், ஒரு தேநீர் அருந்த விரும்புவதைச் சொல்வதுபோல், தம்மையே கொலை செய்வது குறித்து சலனமில்லாமல் மிக எளிதாகச் சொற்களை உதிர்க்கிறார்கள். இவ்வாறாகச் சொல்லியவர்கள் நான்கு பேர் எனில், உள்ளுக்குள்ளேயே சொல்லிக் கொண்டிருப்பவர்கள் பல்லாயிரங்களில் இருக்கலாம். சுயமாய்த் தேடிக்கொள்ளும் வகையில் வாழ்க்கையும் மரணங்களும் அத்தனை சல்லிசாகி விட்டனவா!?

இந்த வாழ்க்கையை மிகக்கெட்டியாகப் பிடித்துக்கொள்ள என்னிடம் இருக்கும், எனக்கு மிகவும் பிடித்த தாரக மந்திரம் நமக்குக் கொடுக்கப்பட்டது ஒரே ஒரு வாழ்க்கை என்பதுதான். என்னிடம் பழகுபவர்களிடம் பல்வேறு தருணங்களில் இக்கூற்றினை மிகத்தாராளமாக மொழிகிறேன். அதைவிடவும் அதிகமாக என்னிடமே நான் திரும்பத்திரும்ப மொழிகிறேன். இதுவே பலநேரங்களில் என்னை இயக்கும் மந்திரச்சொல். இந்த வாழ்க்கை எவ்விதமானதாக அமைந்திருந்தாலும் சரி, சுவாரஸ்யம், பூடகம் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் நிறைந்ததே. மகிழ்ந்திருந்த கணங்கள், நம்பிக்கை மிகுந்திருந்த தருணங்கள் நினைவில் தங்குவதைவிட, நீங்காமல் நிலைத்திருக்கும் வருந்திய கணங்கள், கலங்கிய தருணங்கள் பல மடங்கு அதிகம்.

அந்த எம்ஆர்ஐ ஸ்கேன் மையத்தில் நானும் அச்சமூட்டும் ஒரு காரணத்தோடுதான் காத்திருந்தேன். திருவிழாபோல் கூட்டம். கற்பனையே செய்திட முடியாத அளவிற்கு இளைத்து ஒல்லியாய் இருந்த நோயாளி ஒருவரும் காத்திருக்கிறார். அவ்வளவு இளைத்திருக்கும் ஒருவரை என் வாழ்நாளில் ஒருபோதும் பார்த்ததில்லை. சுருங்கி இறுகி ஒட்டியிருக்கும் தோலிற்குள் எலும்பு நரம்புகள் தவிர்த்து வேறெதுவும் இருக்க முடியாது. அருகில் மனைவி, மகன் போல் தோற்றமளிக்கும் இருவர் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் இன்னும் தங்கியிருக்கும் நம்பிக்கை குறித்தே யோசிக்கத் துவங்குகிறேன். வாழ்வது குறித்த, வாழ வேண்டிய தேவை குறித்த நம்பிக்கைகளை எப்படியேனும் உணர்ந்துதான் ஆகவேண்டும். அப்படி உணர்வதால் பலன்கள் கிட்டுகிறதோ இல்லையோ, உணர மறுப்பதாலோ, உணர மறப்பதாலோ ஒருபோதும் பலன்கள் உருவாக சாத்தியமில்லை.



வாழத் தவிக்கிறேன், நாட்கள் இல்லை!’ என வாழ வேண்டிய வயதில் வாழ்வை முடித்துக்கொள்ளப் பணிக்கப்பட்டவர்களை அறிந்ததுண்டா? அப்படியாக புற்றுநோயால் வாழ்வை முடித்துக்கொள்ளப் பணிக்கப்பட்டவர் இருபத்தேழு வயதே ஆன ஹோலிபட்சர் எனும் பெண். வாழ்ந்திட பெரிதும் ஏங்கும் அவரின் கையில் மரணத்தைத் திணித்துவிட்டு காலம் நின்று விளையாடுகிறது. எந்த வகையிலும் தவிர்க்கமுடியாமல் எதிர்கொண்டேயாக வேண்டிய நிர்பந்தம். பணம், புகழ், அறிவியல் என எதுகொண்டும் தவிர்க்க முடியாத திணிக்கப்பட்ட தீர்ப்பு. அந்தச் சூழலிலும் வாழ்க்கையின் அழகியலை, அவசியத்தை அவர் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார். அதைத்தான் எழுதியிருக்கிறார். அந்தக் கடைசி எழுத்தினைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.   நாம் கொண்டாடும் அல்லது திண்டாடும் வாழ்க்கை குறித்தான வேறொரு வடிவத்தை, பிரமாண்டத்தைக் காட்டும் வல்லமை கொண்டது அந்தக் கடிதம். தெரிந்தோ தெரியாமலோ இந்த வாழ்க்கையின் அருமையை யாரோதான் மீண்டும் மீண்டும் நமக்கு உணர்த்துகிறார்கள். நாமாக உணர்வதற்கு நமக்கு அறிவில்லை, தெளிவில்லை, நேரமில்லை இன்னும் சொல்லப்போனால் நிதானமில்லை. உணர்தல் ஒரு வரம். தேடியடைய வேண்டிய வரம். எனினும் பெரும்பாலும் நமக்கு வாய்ப்பதில்லை.

வாழ்க்கையை முடித்துக்கொள்ள ஏதோ ஒற்றைக் காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு, அதுசார்ந்த குழப்பங்களை முன்பின்னாக வளர்த்துக்கொண்டு, முடித்துக்கொள்ள நினைப்பதாகச் சொன்னவர்களை உற்றுப் பார்க்கிறேன். அந்த ஒற்றைக் காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு சிணுங்கிக் கொண்டு நிற்பவர்களிடம் உரத்துச்சொல்ல ஆயிரமாயிரம் இருக்கின்றன என்னிடம். அவர்கள் தம் செவிகளை, விழிகளை, மனதை அடைத்து வைத்திருக்கும்வரை ஒரே ஒரு  சொல்கூட அவர்களைச் சென்றடைந்துவிட முடியாது..

தான் ஒரு தனித்த உயிர், பிறப்பு தன் கட்டுப்பாட்டில் இல்லாமல் நிகழ்ந்ததுபோல், இறப்பு தானாக வந்து நிகழும்வரை தனக்கென ஒரு வாழ்க்கை இருக்கிறதென ஏற்க மறுப்பவர்களிடம் என்ன செய்வீர்கள்?. உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் கைரேகையும், கருவிழிப்பதிவும் வெவ்வேறாய் இருப்பது போலவே, ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் தனித்த அளவீடுகள், காரணங்கள், இலக்குகள், கடமைகள் இருப்பதை உணர மறுப்பவர்களிடம் என்ன சொல்வீர்கள்? “முட்டாளே!” எனும் ஓங்காரமான குரலொன்றுதான் மூர்க்கமாய் வருகிறது. அந்தக் குரலுக்குள் இருப்பது வெறும் கோபம் மட்டுமல்ல. ஸ்கேன் மையத்தில் சுருங்கிக் கிடந்தவரின் தவிப்பு, தாங்கும் குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு, வாழத்தவித்த ஹோலிபட்சரின் ஏக்கம், ரயிலுக்குள் பாய்ந்தவனை சரியான நேரத்தில் இழுத்தவரின் பேரன்பு உள்ளிட்ட கோடானு கோடிப் பேரின் வாழ்க்கைக்கான ஏக்கமும் பிணைந்தேயிருக்கின்றது.

இது என் வாழ்க்கை, நான் வாழ்வதற்கெனப் பிரத்யேகக் காரணங்கள் உண்டு என நம்ப மறுப்பவர்களைப் பார்க்கும்பொழுதெல்லாம் இனம்புரியாக் கோபமும், இயலாமையும் ஒன்றிணைந்து வருகின்றன. அவர்களின் நம்பிக்கையின்மையை, பிடிவாதத்தை எதுகொண்டேனும் தூக்கி இந்த அண்டவெளிக்கும் வெளியில் வீசியெறிந்துவிட மனம் துடிக்கின்றது. தன்னைக் கொல்வதற்கு ஒரேயொரு காரணத்தைச் சொல்கிற எவரும், வாழ்க்கையைத் தொடர்ந்திடுவதற்கு ஒற்றைக் காரணத்தைக்கூடச் சொல்ல மாட்டேன், தேட மாட்டேன் எனும் கொடும் முரணை என்னவெனச் சொல்வீர்கள்?

வாழ்க்கையின் அருமையை உணர்ந்துகொள்ள எல்லோருக்கும் சந்தர்ப்பம் அமைந்தே தீரவேண்டுமென்பதில்லை. நகரச்சாலையில் லாரி வந்து கொண்டிருக்கிறது. இருசக்கர வாகனத்தில் வரும் அவ்விரு பெண்களும் எங்கிருந்து புறப்பட்டார்கள் எனத்தெரியவில்லை, எந்தச் சிரமமுமின்றி, நேராக லாரியின் இடது பக்கவாட்டில் மோதி மிகக் கச்சிதமாக பின் சக்கரத்திற்குள் விழுகிறார்கள். மோதியதை உணர்ந்த கணத்தில் லாரி ஓட்டுனர் ப்ரேக் மேல் ஏறி நின்றிருக்க வேண்டும். விழுந்தவர்களின் மீது பின்சக்கரத்தின் முனை தொட்டும் தொடாமலும் லாரி நின்று விடுகிறது. தப்பித்துவிட்டார்கள். அது வெறும் தப்பித்தலில்லை. வாழ்க்கை முழுதாய் இன்னொரு முறை கிடைத்திருக்கின்றது. வெறும் இரண்டு நொடிப்பொழுது போதும் அவ்விரு உயிர்களைப் பறிக்க, குடும்பங்களை நிர்கதியாய்த் தவிக்கவிட. அதைவிட அப்படியொன்று நிகழாமல் தடுக்க அதைவிடவும் மிகச் சிறிய ஒரு நொடிக்கும் குறைவான பொழுது போதுமானதாக இருந்திருக்கின்றது. தன்னையே கொலை செய்வது குறித்த சிந்தனையிலிருந்து வெளியேறுவதும்கூட பெரும் தப்பித்தல்தான்


இந்த வாழ்க்கையெனும் புதிரில் மரணமென்பது பெரிய விடையாக இருக்கலாம். பெரிய விடைக்கு முன்பாக முக்கியமான விடையொன்று இருக்கின்றது. அந்த முக்கியமான விடைவாழ வேண்டுமெனும் வேட்கையே”. 

நன்றி : விகடன்

இருளாய் ஒளிர்வது




எவர் சொன்னது
இருட்டிற்கு
ஒளியில்லையெ
இருளாய் ஒளிர்வதென்ன!

-

வெளிச்சத்தைத் தொலை
வேகமாய்த் தழுவும் 
இருளின் தேகத்தை
உணர்ந்து விடலாம்!

-

வாசனை ணர்வோரே
நுகர்ந்து பாருங்கள்
இருட்டிற்கும்
வாசனையுண்டு!

-

யாதுமாரோ...!



யாதுமாகியதும்

யாரோவாகியதும்
நம் காலத்தே

யாதுமாகியிருந்ததுவும்
யாரோவாகியிருப்பதும்
நாமே!


யாதுமாகியிருந்தது
அன்பின் பிழையெனில்
யாரோவாகியிருப்பது
பேரன்பின் பிழையெனக் கொள்!

அனுசரனையாக ஆட்சி செய்தல் எப்படி!?

மனிதர்கள் வாழ்வதற்கு சவால் மிகுந்த நாடுகளில் மாலத்தீவுகள் மிக முக்கியமானது என்பதில் சந்தேகமேயில்லை. மிகுந்த தட்டையான நிலப்பரப்பு கொண்ட மாலத்தீவு, அங்கு பயணிப்போருக்கு ஆச்சரியம் தரும் நிலம். விமானம் நெருங்கும்போதே... “அடேய்...எங்கடா கடலுக்கு நடுவே இறக்கப்போறீங்ளா!!?” என அதிர வைக்கும். விமான நிலையத்திற்கு ஒரு தனித் தீவு, தலை நகருக்கு ஒரு தனித் தீவு, சரக்கு விற்கும் ஹோட்டலுக்கு தனித் (செயற்கை) தீவு என அங்கு எல்லாமே தீவுக்கூட்டம் தான். 

ஆயிரக்கணக்கில் தீவுகள் கூடிக் கிடந்தாலும், மனிதர்கள் வசிப்பதென்னவோ கொஞ்சம் தீவுகளில்தான். அதுவும் தலைநகரிலிருந்து சில தீவுகளுக்குச் செல்ல நாள் கணக்கில் பயணிக்க வேண்டும். 

நன்றாக வாக்கிங் செல்லும் ஒருவருக்கு ஒரு மணி நேரம் இருந்தால் போதும் ‘மாலே’ எனப்படும் தலைநகரை ஒட்டுமொத்தமாய் அனைத்து வீதிகளின் வாயிலாக அளந்து பார்க்க... 

சுற்றுலா, மீன்பிடித் தொழில் என மக்கள் செழிப்பாகவே இருக்கிறார்கள். 2014ல் நான் பயணித்த போது குடிதண்ணீர் விலை இலங்கையை விடக் குறைவுதான். அதென்ன இலங்கையோடு ஒப்பீடு எனக் கேட்கிறீர்களா, அந்தக் குடி தண்ணீர் இலங்கையில் இருந்துதான் இறக்குமதியாகியிருந்தது. சமீபத்தில்கூட குடிநீர் பிரச்சனை எழுந்தபோது இந்திய போர் விமானங்கள்தானே தண்ணீர் கொண்டு சென்றன. மேலும் சில பொருட்கள் இந்தியாவைவிட விலைக் குறைவே.

இப்படியாக பல்வேறு புகழ் வாய்ந்த மாலத்தீவில் மீண்டும் அரசியல் விளையாட்டு ஆரம்பித்திருக்கிறது. ‘எப்ப முடிஞ்சது.. புதுசா ஆரம்பிக்கிறதுக்கு’ என அந்த அரசியல் அறிந்தவர்கள் கேட்கலாம். அதிபரை நீக்குவது, கைது செய்து சிறையில் போட்டு மிதிப்பது, நீதிமன்றத்தைக் கைப்பற்றுவது, படகில் குண்டு வைப்பது என மொத்த மக்கள் தொகையே ஐந்து லட்சத்திற்கு குறைவாகக் கொண்டிருக்கும் அவர்களின் சேட்டைகள் கொஞ்சநஞ்மல்ல.

மாலத்தீவின் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் ‘பிடித்து’ வந்து நம் தமிழக அரசியல்வாதிகளிடம் ஒரு மாதத்திற்கு பயிற்சியெடுக்க வைத்து, எல்லாரும் “அனுசரனையாக” எப்படி ஆட்சி செய்ய வேண்டும் எனச் சொல்லித்தந்தால் என்ன!?


இதுதான் சானிட்டரி நாப்கின், இதில் எந்த அவமானமும் இல்லை.

இதோ இதுதான் சானிட்டரி நாப்கின். இதில் எந்த அவமானமும் இல்லை. இது இயற்கையான விஷயம். அவ்வளவுதான்.

Yes... that’s a Pad in my hand & I don’t feel weird. It's natural, Period!

#PadmanChallenge

*


பேச வேண்டிய உண்மைகளைப் பேசாமல் தவிர்ப்பதும், காலம் தாழ்த்துவதும் கூட ஒரு வகையில் குற்றம்தான்.
இது கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் ஆவணப்படம் ( http://maaruthal.blogspot.in/2012/12/blog-post_31.html ) குறித்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரையின் முதல் வரி.
ஒவ்வொருவரையும் தன்னுள்ளே தாங்கி, உருவம் கொடுத்து, வளர்த்து உலகுக்குத் தரும் கருப்பை தன்னை ஒரு சுழற்சியில் சுத்தப்படுத்திக்கொள்ள, தகுதிப்படுத்திக்கொள்ள வெளியேற்றும் உதிரம் ஏன் (ஆரோக்கியம் எனும் காரணம் தவிர்த்து) “தீட்டு” என்று கட்டமைக்கப்பட்டது என்பது குறித்து எப்போதும் கேள்வியுண்டு.
என் மகள் 9-10 வயதாக வளரும்போதே அவள் பருவமடைந்தால், அந்த நிகழ்வை திரட்டி சீர் (பூப்பு நன்னீராட்டு விழா) செய்வது குறித்து விதவிதமான பேச்சு எழுந்து கொண்டேயிருந்தது. மிக உறுதியாக, மென்மையான அப்படியான ஒரு நிகழ்வு மட்டும் நடந்துவிடக்கூடாது என்பதை விடாப்பிடியாக வலியுறுத்திக் கொண்டே வந்தேன். முதலில், நகை, புத்தாடை என கொண்டாட்டமாய் கருதிவிடும் சாத்தியமுள்ள மகள் மனதை வசப்படுத்தினேன். அடுத்து மனைவி, அம்மா என ஒவ்வொருவராய் நகர்த்தி, இறுதியாக உங்கள் திருப்திக்கு சடங்கு எதும் செய்ய வேண்டுமெனில் (பத்து-இருபது பேர்) முதல் வட்ட உறவுகளோடு முடித்துக்கொள்ளலாம் என்றளவில் தயார்படுத்தி வைத்திருந்தேன்.
எதிர்பாராத ஒரு நாளில் அவள் பருவமெய்திட, சடங்கு, சாங்கியம் எனும் பெயரில் வீட்டை விட்டு வெளியே போகவே கூடாது எனத் தடுக்கப்பட்டிருந்தாள். மூன்றாம் நாளே பள்ளிக்கு போகனும் என விரும்பியவளை, உறவுகளிடம் வீட்டில்தான் இருக்கிறாள் எனச் சொல்லி, பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். அவளிடம் மிக அழுத்தம் திருத்தமாக இது உடலில் நிகழும் ஒரு மாற்றம், உடல் நலனில் கவனம் எடுத்துக்கொள் என்றளவிலேயே திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறேன்.
அவளுடைய மாதாந்திர நாட்களில் உன்னால் முடிந்த எதையும் செய்துகொள் எனும் ஊக்கம் தந்து, அது தீட்டு என ஒரு போதும் முடங்கிப் போகாதே என்பதை அழுத்திச் சொல்லிக்கொண்டேயிருக்கிறேன். இதோ சமீபத்தில்கூட நானும் அவளும் ஒரு மளிகைக் கடையில் 'நாப்கின்’ வாங்கும்போது, அந்தப் பாக்கெட்டை ஒரு காகிதக் கவரில் போட்டு, கேரி பேக்கில் போட்டுக் கொடுக்க, இரண்டையும் அங்கேயே வைத்துவிட்டு அந்தப் பாக்கெட்டை மட்டும் எடுத்துக்கொண்டு வா என்று சொன்னேன்.
என்னளவில் ஒரு கடைக்குச் சென்று ஒரு ‘நாப்கின்’ பாக்கெட்டை காகிகப் பையில் போட்டு மறைக்காமல் வாங்கி வருவதில் கூச்சமோ தயக்கமோ கிடையாது. அவ்விதமே உணரும்படி குடும்பத்திலும் வலியுறுத்திச் சொல்கிறேன். என் மகளோ, உறவுகளோ, ஏனைய தோழமைகளோ, அவர்கள் தம் மாதவிடாய் காலத்தைக் கடப்பதில் ஒரு ஆணாக உறுதுணையாக நிற்பது என் குறைந்தபட்ச கடமையென்றே கருதுகிறேன்.
*
சானிட்டரி நாப்கின்னில் எந்த அசிங்கமும் அவமானமும் இல்லை என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் புரட்சியின் முக்கிய கருவி ஒரு ஆண் என்பதுதான் விசேஷம். கோவையை சேர்ந்த முருகானந்தம் கதை எல்லாருக்கும் தெரியும். மலிவு விலையில் சானிட்டரி நாப்கின் தயாரித்து ஊரகப் பெண்களுக்கு வழங்கும் அவர் முயற்சி இப்போது உலக அளவில் புகழ் பெற்று ஐக்கிய நாடுகள் சபையில் அவர் உரையாற்றுவது வரை போனது. இப்போது அவரின் 'நாப்கின் இயந்திரம்' இந்தியாவின் பிற்பட்ட வடமாநிலங்களில் எல்லாம் அரசாங்கங்களால் பயன்படுத்தப் படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது. முருகானந்தத்தின் பயணம் ஐஐஎம் பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட்டிருக்கிறது.
அதுவே இப்போது திரைப்படமாக பாட்மேன் (Padman) என்று அக்சய் குமார் நடிப்பில் ஹிந்தியில் வெளிவர இருக்கிறது. அதனை விளம்பரப் படுத்த முருகானந்தம் 'பாட்மேன் சவால்' என்று துவங்கினார். அதாவது திரைப் பிரபலங்கள் ஒரு நாப்கினை கையில் பிடித்து செல்பி எடுத்து வெளியிட வேண்டும். அதில் இன்னொருவரை டேக் செய்ய வேண்டும். அவர் அக்சய் குமார் மனைவியை டேக் செய்ய, அவர் அமீர் கானை டேக் செய்ய, ஆலியா பட், தீபிகா, அர்ஜுன் கபூர் என்று படங்கள் தொடர்ந்து வெளிவர, சானிட்டரி நாப்கின் பற்றிய விவாதங்கள் துவங்க ஆரம்பித்து விட்டன. அவர்கள் படங்களோடு 'இதோ இதுதான் சானிட்டரி நாப்கின். இதில் எந்த அவமானமும் இல்லை. இது இயற்கையான விஷயம். அவ்வளவுதான்.' என்ற வார்த்தைகளையும் காபி பேஸ்ட் செய்தும் வெளியிடுகிறார்கள்.
இது மிகவும் பாராட்டத் தகுந்த விஷயம். இதையே நம் தமிழ் நடிக நடிகைகள் செய்து யோசித்துப் பாருங்கள். அது எப்பேர்ப்பட்ட மாற்றங்களை நம் சிந்தனையில் விதைக்கும் என்று? அதனால்தான் நான் அடிக்கடி சொல்கிறேன். பாலிவுட்டின் பொற்காலம் இதுதான்.