அடைபடும் வழித்தடங்கள்

எது வாழ்க்கைஎனும் ஒற்றைக் கேள்விக்கு, இங்கு ஆயிரமாயிரம் பதில்கள் உண்டு. அவையனைத்தும் பொருத்தமான பதில்களாகவும், சரியான பதில்களாகவும் இருக்க வெண்டுமா என்ன? சரியான பதில்கள்தான் வேண்டும் என்று அடம் பிடிப்பதாய் வைத்துக் கொள்வோம். அப்படியான சரியான பதில்களை மட்டுமே வைத்து திருப்தியடைந்து விடமுடியுமா? ஒருவேளை தவறான பதில்கள் வரும்பட்சத்தில் என்னென்ன தீங்குகள் அல்லது இழப்புகள் நிகழ்ந்துவிடும்?

மரணித்துப்போகத் தேவையான அளவிற்கு தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டு, கூடுதல் உறுதிக்கு கை மணிக்கட்டு நரம்பை அறுத்துக் கொண்டு, அதுவும் போதாதென்று இருபதுகளில் இருக்கும் ஒருவர் மாடியிலிருந்து கீழே குதித்த செய்தியொன்று மனதிற்குள் கோரமானதொரு இம்சை செய்து கொண்டிருக்கிறது. இப்படியான செய்திகளை அவ்வப்போது பலவிதங்களில் கேட்டுக் கடப்பதொன்றும் புதிதில்லை. அப்படியானவர்களில் யாரேனும் நமக்கு தொடர்புடையவர்களாய் இருப்பின், அது கூடுதல் கலக்கத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.

தன்னைக் கொல்வதற்காக இந்த மூன்று காரியங்களையும் செய்தவரை எனக்குத் தெரியும்; அல்லது அவருக்கு என்னைத் தெரியும். தம் உயிர் மீது அவர் நிகழ்த்திய கொடூரத்திற்கு பெரிய காரணம் ஒன்றுமில்லை. சொன்னால் அட இதுக்காகவா?’ என்று கேள்வி மிக எளிதாய் எழும். வெகு எளிதான அந்தக் காரணத்தின் பெயர் காதல். ‘அட காதல் தானா?’ என ஒற்றைச் சொல்லில் நாம் கடந்து போகப் பார்க்கலாம். காரணம் நம் அகராதியில் காதல் எனும் பதத்திற்கு கிடைக்கும் அர்த்தமும், அவர் அகராதியில் காதல் எனும் பதத்திற்கு கிடைக்கும் அர்த்தமும் வெவ்வேறானவை. கடக்க முடியாததாகக் கருதப்பட்ட தோல்வியோ, சுமக்க முடியாத ஒரு துரோகமோகூட காதலின் அர்த்தமாக இருந்திருக்கலாம். சரி அதற்காக தன்னைக் கொலை செய்துவிடுவது என்பது மட்டுமே நியாயமான பதிலா!?

எது வாழ்க்கைஎனும் கேள்விக்கு, சில வேளைகளில் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியூட்டும் பதில்கள் வந்துவிடும். இன்னும் சில தருணங்களில் ஏதேனும் ஒரு பதில் கிடைத்துவிட்டாலே  போதுமென்றும் தோன்றிவிடுகிறது. அப்படியான விரும்பும் பதில்கள் மற்றும் வந்துவிழும் பதில்களின் மத்தியில், நான் நினைக்கும் பதில் வேறு. ‘வாழ்க்கை என்பது எதிலிருந்தேனும் தொடர்ந்து கற்றுக்கொண்டே ருப்பதுன்பதாகவே அது இருக்கும்.



கற்பித்தல், கற்றுக்கொள்ளல் என்பது பள்ளி, கல்லூரி, பணியிடம் மற்றும் தேவை சார்ந்த துறைகளையொட்டியது எனும் ஒரு எண்ணத்தை தெரிந்தோ தெரியாமலோ வலுவாய் வடிமைத்துக்கொண்டுள்ளோம். ‘கற்றல்என்றாலே கரும்பலகை முதற்கொண்டு நவீன வடிவத்தில் இருக்கும் கற்பித்தல் முறை வரை மனதில் படமாய் ஓடுகிறது. ‘கற்றுக்கொள்ளல்என்பது ஒரு கட்டத்தோடு நிறைவடைந்து விடுவதாய் கருதும் மூட நம்பிக்கையும் நம்மிடம் உண்டு. வெகுசிலரே தாம் காணும் எல்லாவற்றிலிருந்தும் ஏதோ ஒன்றைக் கற்றுக்கொண்டு, கற்றுக்கொண்டதை வாழ்வில் செயல்படுத்தும் குணமும், திறனும் உள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களின் வாழ்க்கையில் சலிப்பும் புகார்களும் குறைவு.

திரைப்படங்களில் சிறிய பெண்ணாய் தோற்றத்தில் இருந்த அந்த நடிகை திருமணம் செய்து கொள்கிறார். சில ஆண்டுகள் கழித்து மடியில் குழந்தையோடு தன் படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடுகிறார். உருவத்தில் பருத்திருக்கிறார். அவருடைய தற்போதைய தோற்றத்தை வைத்து இணைய வெளியெங்கும் ’நகைச்சுவை’ எனும் போர்வையில், கேலிகளும் கிண்டல்களும் வெடித்துச் சிதறுகின்றன. அப்படிச் செய்பவர்களில் யாரும், எவ்வகையிலும் அந்த நடிகையோடு தொடர்புடையவர்களும் கிடையாது. பொதுவெளியில் இருக்கும் யாரையும், எதற்கும், எவ்விதமும் தீண்டலாம் எனும் மனவெளிப்பாடு. ‘அந்த உருவ மாற்றம் என்பது தாய்மையின் விளைவு’ எனும் நிதர்சனம் யாருக்கும் புரியாத புதிரல்ல. அத்தனை கிண்டல், கேலிகளுக்கும் பதிலளிக்கும் வகையில்தாய்மையே மகிழ்ச்சி, குழந்தைக்கு அமுதூட்டுவது மகிழ்ச்சிஎன குழந்தையோடு இருக்கும் மற்றொரு படத்தை புதிதாக வெளியிடுகிறார். அவர் வெளியிட்ட படம் கிண்டல் செய்தவர்களுக்கான பதில் அல்ல; பாடம்.

எதிலிருந்தெல்லாம் கற்றுக் கொள்ளலாம், கற்றுக்கொள்வதின் அவசியம் என்ன?’ போன்ற கேள்விகள் வெகு இயல்பாகவே எழுவதுண்டு. எங்கு எவ்விதம் இந்த வாழ்க்கையை கற்றுக்கொண்டோம் என நினைத்துப் பார்த்ததுண்டா? கல்வி என்பதுதான் கற்றுக்கொடுக்கிறது எனக் கருதினால், அதுதான் ஆபத்தான பதிலாக இருக்கும். மனிதனின் சராசரி ஆயுளில் தோராயமாக நான்கில் ஒரு பங்கு காலம், கல்விக்காகவே மட்டுமே அர்ப்பணிக்கப்படுகின்றது. ஆழ்ந்து யோசித்தால் அந்தப் பருவத்தில் கற்றுக்கொள்வதும்கூட வாழ்வதற்கு என்பதைவிட பொருளீட்டுவதற்கு என்றே சொல்ல வேண்டும். அந்தக் கல்வி ஆயுட்காலம் முழுமைக்கும் வாழ்ந்துவிடும் வழிகளைத் தந்துவிடுகிறதா என்ன?

யாரோ எதன் நோக்கிலோ தயாரித்த பாடத்திட்டங்களை மையப்படுத்திய கல்வி, பல தருணங்களில் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதுஎன்பதாகத்தான் உள்ளது. வாழ்க்கைக்கான கல்வியை நாம் சந்திக்கும் சூழல்களே பெரும்பாலும் கற்றுக்கொடுக்கின்றன. கிடத்தப்பட்டிருக்கும் பச்சிளங் குழந்தையொன்று குப்புற விழுவதற்கு எடுக்கும் முயற்சியில் தொடங்கி, 94ம் வயதிலும் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் ஜான் குடெனஃப் அவர்களின் வாழ்க்கை வரை எல்லாவற்றிலிருந்தும் கற்றுக் கொள்ள ஆயிரமாயிரம் இருக்கின்றன. அம்மாதிரியான கற்றுக்கொள்ளல்களில் வழியே வாழ்வதுதான் வாழ்க்கை. ”இயற்பியல் துறையில் சாதிப்பதற்கான வயதையெல்லாம் தாண்டிவிட்டீர்கள்என 25 வயதில் பல்கலைக் கழகத்தில் ஒதுக்கப்பட்ட ஜான் குடெனஃப், தம் 57ம் வயதில் லித்தியம் பேட்டரியை கண்டுப்பிடித்ததும், 94ம் வயதில் மற்றொரு வகை பேட்டரிக்கு காப்புரிமைக்கு விண்ணப்பித்திருப்பதும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் தானே!?



ஒரு அப்பாவும் மகளும் காரில் வந்து கொண்டிருக்கிறார்கள். வலது பக்க சாலை ஓரமாய் காரொன்று முன்பக்கம் நசுங்கி நிற்கிறது. கூட்டம் பரபரப்பாக கூடிக்கொண்டிருக்கிறது. காரின் பின் பக்கம், சுமார் நூறு மீட்டர் தொலைவில் ஒரு பைக் சிதறிக் கிடக்கிறது. அருகில் மடியில் ஒரு இளைஞனின் தலையைத் தாங்கியபடி இன்னொரு இளைஞர் கதறிக் கொண்டிருக்கிறார். அந்த அப்பாவும் மகளும் தங்கள் அவசரத்தையொட்டி கடந்து செல்கிறார்கள். சிறிது நேரத்தில் எதிரிலிருந்து 108 ஆம்புலன்ஸ் ஒன்று விரைந்து கடக்கிறது.

அதே அப்பாவும் மகளும் சில நாட்கள் கழித்து இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள். அரசுப் பேருந்து ஒன்று தாறுமாறாய்த் திரும்பி நிற்கிறது. கூட்டத்தின் கவனம் பேருந்தின் மீது பதிந்திருக்கிறது. கடக்கும்போது முன் சக்கரத்திற்கும் பின் சக்கரத்திற்கும் இடையே தலை நசுங்கிய ஒரு முதியவர் கிடக்கிறார். விபத்தின் விபரீதம் புரிந்தது. அந்த இடத்தையும் மௌனமாய்க் கடக்கிறார்கள். அதிர்ச்சி மெல்ல மெல்லத் தேய்கிறது.

அன்றிரவு மகள் சொல்கிறாள்அப்பா இனிமே அந்த மாதிரி ஆக்ஸிடெண்ட் எதும் பார்த்தா, ஹெல்ப் பண்றமோ இல்லையோ ஒரு ரெண்டு நிமிசம் நின்னு, யாரு, என்ன, ஏதுனாச்சும் பார்த்துட்டு போலாம்பா!” ஒரு விபத்து நடந்த இடத்தில் சற்று கூட்டம் கூடியதுமே, ‘அதுதான் கூட்டம் கூடிவிட்டதே... நாம் மட்டும் என்ன செய்துவிடப்போகிறோம்? நமக்கு முக்கிய வேலை இருக்கிறது, நமக்கு நேரமில்லைஎனப் பல்வேறு காரணங்கள் மற்றும் சமாதானங்களை முன்வைத்து நழுவிவிடும் மனநிலைக்கு, சுருக்கெனத் தைக்கும் விதத்தில் அந்த சிறிய பெண்ரெண்டு நிமிசம் நின்னுட்டு போலாமேஎன்ற வேண்டுகோளின் மூலமாக ஆயிரமாயிரம் விசயங்களை உணர்த்திவிடுகிறாள்.

எல்லாம் எனக்குத் தெரியும்’, ‘இன்னும் புதிதாக என்ன இருந்துவிடப்போகிறது’, ‘சிலதெல்லாம் அப்படித்தான் இருக்கும்என்பது மாதிரியான மனநிலைகள் ஆபத்தானவை. ஒரு ஏரியோ, குளமோ தனக்கு வரும் நீர் வழித்தடங்களை தாமே அடைத்துக் கொள்வதற்கு ஒப்பானது இது. ஏரி, குளங்கள் ஓரிரு கால்வாய்களை மட்டுமே நம்பியிருப்பதில்லை. அந்தப் பகுதிகளில் பெய்யும் மழை நீரை தன்னை நோக்கிக் கொண்டுவரும் பல்வேறு நீர் வழித்தடங்களையும் நம்பித்தான் இருக்கின்றன. பெருங்கால்வாய்கள் நீரைக் கடத்திவர தவறும் தருணங்களிலெல்லாம் சிற்சிறு நீர் வழித்தடங்களில் கிட்டும் நீரைக் கொண்டு அவை உயிர்ப்புடன் இருக்கும். வழித்தடங்களை தொலைக்கும் ஏரி குளங்களுக்கு வாழ்வேது?. தம்மில் இருந்த நீரை ஆவியாதலில் தொலைக்கும், மாசுகளை மௌனமாய் ஏற்றுக்கொள்ளும், தன்னையே தகுதியற்றதாய் மாற்றிக்கொள்ள அனுமதிக்கும். ஒன்றுக்கும் உதவாததாய் மாறியும் போகும்.

கற்றுக்கொள்ளலை ஒதுங்க ஆரம்பிக்கின்ற தருணத்திலிருந்து வாழ்க்கை மெல்ல புளிப்பேறத் துவங்குகிறது. புளிப்பேறத் துவங்கிவிட்ட வாழ்க்கையில், உன்னத ருசியை மீட்டெடுப்பது அவ்வளவு எளிதானதல்ல. வாழ்க்கையைக் கற்றல் என்பது திட்டமிடப்பட்ட பாடத்திட்டம் சார்ந்தன்று. கற்பித்தல் என்பது தூணிலிருந்தும், துரும்பிலிருந்தும் நிகழலாம். கற்றுக்கொள்தல் மிக எளிது, அறிவின் அத்தனை கண்களும் திறந்திருப்பது போதும்

-

நம்தோழி ஜூலை 2017ல் வெளியான கட்டுரை

No comments: