வானத்தின் மார்பெங்கும் தழும்புகள்




இந்த இருள் தரும் ஒவ்வாமை
சொற்களால் உணர்ந்திட முடியாதது
வீசும் காற்றிலும்கூட
வெம்மை முறுக்கேறியிருக்கிறது
அறுந்துவிழும் நட்சத்திரமொன்று
என் கையருகே வராமல்
எரிந்து சாம்பாலாகி மிதக்கிறது
வெற்றுப்பாதம் கொழுவியிருக்கும்
ஆதி நிலத்தின் வெப்பம்
துளியும் இளகுவதாயில்லை

இந்த இருள் சொற்கள்தோறும்
மௌனங்களைப் போர்த்துகிறது
எழுதுகோலில் கனத்திருக்கும் மை
நிறமிழந்து கசிகின்றது
பசலையேறிய விட்டில் பூச்சியொன்று
வெளிச்சம் நோக்கிப் பாய்கிறது

இந்த இருள் கடலலைபோல்
மோதிக்கொண்டேயிருக்கிறது
தேய்ந்துபோயிருக்கும் நிலவை
நினைவில் உயிர்ப்பிக்கிறேன்
வானத்தின் மார்பெங்கும் தழும்புகள்!

1 comment:

ஸ்ரீமலையப்பன் said...

அருமையான கவிதை