எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

முதன் முதலில் நியூஸ்-7 நிகழ்ச்சி ஒளிப்பதிவிற்காக நண்பர் கோபால கிருஷ்ணன் அழைத்த தினத்தில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை

அடுத்து சென்னை சென்றிருந்த ஒரு தினத்தில் வழக்கம்போல் கூடுதல் பணிகளை வைத்துக்கொண்ட நிலையிலும், வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். ஒப்புக்கொண்ட நேரத்திற்கு செல்லமுடியுமா என்ற சந்தேகத்தோடு ஒருவித போராட்ட மனநிலையில், சென்னையைச் சுற்றி அலைந்துவிட்டு தொலைக்காட்சி நிலையத்திற்குச் சென்றேன்.

என்னவிதமான கேள்விகள் கேட்பீர்கள் என்று நான் கேட்டு என்னைத் தயார் படுத்திக்கொள்ள முனைந்த போதெல்லாம் மிக எளிதாக என்னைக் கையாண்டு களத்திற்கு நேரடியாக அழைத்துச் சென்றுவிட்டார் கோபாலகிருஷ்ணன்.

இலக்கியம், படைப்பு, எழுத்து என்று அவர் துவங்கியதுமே மனதிற்குள் ”அய்யய்யோ” என்று அலறியபடியே சரி எப்படியாச்சும் சமாளிப்போம் என்றுதான் பதிலளிக்கத் துவங்கினேன். உண்மையில் நிகழ்ச்சி முழுக்கவே பில்டிங் Vs பேஸ்மெண்ட் வடிவேலு நிலமைதான். ஒரு கேள்வியேனும் என் அளவிற்கு இறங்கி வந்து கேட்கமாட்டாரா என்று நானும், ஒரு கேள்விக்கேனும் கேள்வியின் தன்மைக்கு ஏற்ப நான் வந்து பதில் தந்துவிடமாட்டேனா என அவரும் எதிர்பார்த்ததுதான் அதில் சிறப்பே… ஒருவழியாக ’தம்’ கட்டி உரையாடலை முடித்துக் கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

எந்த அளவிற்கு பொருத்தமாகவும் தெளிவாகவும் பதிலளித்தேன் என்ற சந்தேகம் இருந்தாலும். கேள்வி கேட்ட விதமும், நிகழ்ச்சி பதிவு செய்த விதமும் எனக்கொரு அற்புதமான அனுபவம். அந்த வகையில் என்னோடு உரையாடிய நண்பர் கோபாலகிருஷ்ணனுக்கும், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் இந்து அவர்களுக்கும் அன்பும் நன்றிகளும்.

சில நாட்கள் கழித்து மார்ச் 13தேதி ஞாயிறு காலை நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று தகவல் தந்தார். நானும் இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் பார்க்கும் அளவிற்கு மனநிலையை தயார் படுத்திக்கொண்டு ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள்+ என்று மட்டும் இல்லாமல் வாட்ஸப்பில் இருந்த 750 பேருக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பு குறித்து அறிவித்துவிட்டேன். அந்த ஞாயிறும் வந்தது… வழக்கமாக ஞாயிறுகளில் 10 மணிக்கு எழும் மகளை முன்னமே எழுப்பி கூட்டாக உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தால் 8.30 மணிக்கு மேல் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் குறித்த விளம்பரங்கள் மட்டுமே தொலைக்காட்சியில் வர ஆரம்பித்தன. கிட்டத்தட்ட ஆறேழு நிமிடங்கள் கடந்த நிலையில் செய்தியின் புதிய தொகுப்பு வர மகளும், மனைவியும் என்னைப் பார்க்க… நான் “ங்ங்ஙே” மோடிற்குச் சென்று கொண்டிருந்தபோது அழைத்த கோபாலகிருஷ்ணன் தொழில்நுட்பக் காரணங்களால் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யமுடியவில்லை எனும் தகவலைச் சொன்னார். நான் ”ங்ங்ஙே” மோடில் இருந்து அப்படியே ஆஃப்லைன் மோடிற்கு எஸ்கேப் ஆனேன்.

நேற்று (25.03.2016) அழைத்த கோபாலகிருஷ்ணன் இன்று காலை 8.30க்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது என்றார். மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக விதி வலியது என்று நானே சிரித்துக் கொண்டேன். காரணம் இன்று காலை 10 மணிக்கு நான் பாப்பிரெட்டிபட்டியில் இருக்க வேண்டும். காலை 7.45க்கு இன்டர்சிட்டி ரயில். என்னை நானே பார்ப்பதிலிருந்து தப்பித்தலும் கூட நல்லதுக்குத்தான் என்ற நினைப்போடு, வழக்கம்போல் ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள்+, வாட்ஸப்பில் (இந்த முறை 300 பேருக்குத்தான்) தகவல்களைப் பகிர்ந்துவிட்டு ’ங்ங்ஙே-ஜென்’ மனநிலையோடு காலை ரயிலில் கிளம்பி விட்டேன்.

8.30லிருந்து வாட்ஸப், ஃபேஸ்புக் என நட்புகள் அடுத்தடுத்து தொலைக்காட்சியில் ஓடும் நிகழ்ச்சியை படமாக அனுப்பிக் கொண்டேயிருக்க, நான் டபுள் ஸ்ட்ராங் ”ங்ங்ஙே-ஜென்” மனநிலைக்குப் போய், அங்கிருந்து ஆசை துறந்த புத்தன் அளவிற்கு மாறிப்போயிருந்தேன். அதன்பின் பாப்பிரெட்டிபட்டி பள்ளி நிகழ்வில் மூழ்கி, மகிழ்ந்திருந்து ஒருவழியாக மாலை ஊர் திரும்ப மின்னஞ்சலில் YouTube சுட்டி அனுப்பியிருந்தார்கள்.

”ஆஹா… இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கதிரா!?” என நிகழ்ச்சியைப் பார்க்க ஆரம்பித்தேன். எனக்கு முன்பே பார்த்தவர்களுக்கு அன்பும் நன்றிகளும். இனி பார்க்க விரும்புபவர்களுக்காக முன்கூட்டிய நன்றிகளும் சுட்டிகளும்…





”எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!” இந்த வரி ரொம்ப நல்லாருக்குல்ல!

வித்தியாசமான, சவாலான, சாகசமான அனுபவங்களைக் கொடுத்ததற்கு பிரியம் நிறைந்த அன்பும் நன்றிகளும் கோபாலகிருஷ்ணன்.

-

ஆட்டமும் ஆசுவாசமும்



ஒரு நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய ஒரு காணொலிக் காட்சிதான் அது. தரமான ஒளிப்பதிவொன்றும் கிடையாது. கைப்பேசியில் திட்டமிடாமல் பதிவு செய்யப்பட்டு பகிரப்பட்டிருக்க வேண்டும். இரைச்சலான இசை அதிர்கிறது. திறந்திருக்கும் கதவு வழியே ஒரு காவல்துறை அதிகாரி ஆடியபடியே அந்த அறைக்குள் நுழைகிறார். அது அரசாங்க குடியிருப்பு அறை அல்லது ஓய்வு அறையாக இருக்கலாம். கதவின் அருகிலிருப்பவர் அவசரமாகக் கதவை மூடித்தாழிடுகிறார்.

அதிகாரியின் தோற்றம் ஓய்வு பெரும் வயதினை அண்மிக்கிறார் எனச்சொல்கிறது. உள்ளே நுழையும்போதிலிருந்தே நொடிப்பொழுதும் வீணடிக்காமல் மிக நேர்த்தியாக நடனம் ஆடிக்கொண்டேயிருக்கிறார். நடனம் என்பதைவிட ’குத்தாட்டம்’ என்று சொன்னால் அது அந்த ஆட்டத்திற்கு நெருக்கமான பெயராக இருக்கும். ஒரு கையில் தொப்பியை வைத்துக்கொண்டே ஆடுகிறார். அணிந்திருக்கும் பெல்ட், ஷூ அவருடைய பணித்தகுதியை உணர்த்துகின்றன. சட்டையில் மூன்று நட்சத்திரங்கள் மின்னுகின்றன.

தனது தொப்பையையும் பருமனையும் பொருட்படுத்தாமல் குனிந்து நிமிர்ந்து ஆடுகிறார், உடலை வளைத்து நளினம் கூட்டுகிறார், ஒரு கால் தூக்கி ஆடுகிறார். லுங்கியும் பனியனும் அணிந்த ஒரு நபரும் கை பேசியில் அதைப் பதிவு செய்கிறார். பறைகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் கவனம் குவித்து, புன்னகையோடு நடனம் ஆடுகிறார். சுழன்று சுழன்று ஆடி, கதவை நோக்கிச் செல்கிறவர், அந்த ஒரு நிமிடப் பொழுதில், தான் விரும்பிய வண்ணம் வாழ்ந்துவிட்ட திருப்தியோடு மனம் நிறைந்து சிரித்தபடியே வெளியேறியிருப்பார்.

காவல்துறையின் சிஸ்டத்திற்குள் மூன்று நட்சத்திரங்கள் தரித்த ஒருவர் சாமானியர்கள் முன்னிலையில் தன்னை மறந்து நடனம் நிகழ்த்துவதென்பது ஆச்சரியம்தான். இது காவல்துறையின் சிஸ்டம் குறித்தோ, படிநிலைகள் குறித்தோ பேசுவதற்காக அல்ல! ஒவ்வொரு உடுப்புக்குள்ளும், முகமூடிக்குள்ளும் இருக்கும் மனிதனின் சுயவிருப்பக் கொண்டாட்டம் குறித்துதான்.

அறையவிட்டு வெளியேறிய நொடியிலிருந்து அவரைச் சந்திக்கும் வெளி உலகம், அவரை வேறு மாதிரி வரவேற்கும் சாத்தியங்களுண்டு. விறைப்பாக நிற்பதும், அதட்டலாகப் பேசுவதும், அதிகாரத்தைச் செலுத்துவதுமென அவர் வேறொரு முகமூடி அணியலாம். அப்படி அணியும் தருணமேதும் வருகையில், உள்ளுக்குள் இந்த ஆட்டம் உச்ச ஸ்தாதியில் நிகழும் முரணும் கூட ஏற்படலாம்.

*
நகரத்திலிருந்து கிராமத்திற்குள் பாயும் சாலையில், ஒரு விளைநிலத்தை மேடாக்கி புதிதாக திருமண மண்டபம் எழுப்பியிருக்கிறார்கள். அதற்கு எவருடைய வாயிலும் நுழையாத பெயர் ஒன்று வைத்திருக்கிறார்கள். அழைப்பிதழ் வந்தபோதும், திருமண நிகழ்விற்கும் சென்றபோதும் அந்தப் பெயர் மனதிற்குள் நுழையாத ஒரு பெயராகவே இருந்தது. காலை 9 மணி அளவில் முன்பக்கமிருந்த ஒரு கூடத்தின் நிழலில் சற்று ஓய்வாக அமர்ந்திருக்கிறேன்.

தலைக்கு மேலே இருந்த சுவற்றில் அந்த மண்டபத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது. பெயரை மனப்பாடம் செய்யும் நோக்கத்துடனோ என்னவோ அடிக்கடி தலை உயர்த்தி பார்த்துக்கொண்டிருந்தேன். பார்வையைத் தாழ்த்தி சுழல விடுகிறேன் மண்டபம் கலைந்து கிடந்தது. நாற்காலிகள் திசைக்கொன்றாய், தேநீர் பருகிய காகிதக் கோப்பைகள் அந்தப் பகுதியெங்கும் என கசங்கிக் கிடந்தது. சுமாராக பதினைந்து மணி நேரங்களுக்கு முன், இந்த நிகழ்வு துவங்கும் முன் இந்த மண்டபம் எப்படி புத்துணர்வோடு, போலிவோடு இருந்திருக்கும் என்ற சிந்தனை ஓடியது. புத்துணர்வு, பொலிவு என்பதைக் கடந்து முந்தைய மாலை அந்த மண்டபம் தாங்கியிருந்த கம்பீரம் இப்போது கலைந்திருக்கும் நிதர்சனம் எத்தனை அழகிய பாடம்.

இடது பக்கம் இருந்த உணவு அரங்கத்தின் முகப்பில் இருக்கும் வெற்றிட நிழலில் ஒருவர் படுத்திருப்பதைக் காண்கிறேன். அருகில் மேளம், நாதஸ்வரம் உறைகளிலிடப்பட்டு ஓய்வாக வைக்கப்பட்டிருக்கின்றன. அவரின் வயது அறுபதுக்கும் எழுபதுக்கும் இடையில் இருக்கலாம். அடர் கருப்பாய் இருக்கும் கேசத்தின் வேர்களில் மொத்தமாய் வெண்மை. கருஞ்சிவப்பு கரையில் தங்கநிறப் பூ போட்ட வேட்டியும், கிளிப்பச்சைக் கரை போட்ட துண்டும் அணிந்திருக்கிறார். மேளம் அடிப்பவர்கள் எப்போதும் இப்படியான கரை போட்ட வேட்டி துண்டுகளையே அணிகின்றனர். தங்கள் பணியெல்லாம் நிறைவடைந்து, உணவு உண்டு வீட்டுக்குப் புறப்படும் நேரத்தில் எதற்காகவேணும் காத்திருக்கும் நேரத்தை படுத்து ஆசுவாசப்படுத்திக்கொண்டிருக்கிறார் என நான் யூகித்துக்கொண்டேன்.

திருமண அரங்குகளில் ”மனிதர்கள்” மட்டுமே புழங்கிய, முன்னிறுத்தப்பட்ட ஒரு காலகட்டத்தில் இந்த மாதிரி மேளதாளங்களின் இசை அவசியப்பட்டிருக்கலாம் அல்லது ரசிக்கப்பட்டிருக்கலாம். இன்றைக்கு திருமணக் கூடங்கள் எதன் கட்டுப்பாட்டில் இருக்கிறதென்றே தெரியாத மாயைக்குள் உழன்று கொண்டிருக்கிறது. எல்லாவற்றிலும் பகட்டு, சம்பிரதாயம் என்ற அளவில் மட்டும் அது வடிவமைக்கப்படுகிறதே தவிர உண்மையில் அங்கு நிகழ்த்தப்படும் நிகழ்வுகளில் ஒன்ற முடிகிறதா என்றே தெரியவில்லை. மணமக்களைச் சந்திக்க மேடைக்குச் செல்வது அவர்களை வாழ்த்துவதற்காக என்பதைவிட அருகில் நின்று நிழற்படம் எடுத்து ”அட்டனென்ஸ்” போடுவதற்காகத்தான் என்பதாகி விடுகின்றது. தாலி கட்டும் நேரத்தில் அங்கே இருக்கும் போட்டோ, வீடியோ எடுப்பவர்களைத் தவிர்த்து அரங்கிலிருக்கும் எவரும் பார்க்க முடியாத ஒரு நெருக்கடியை நாமே கொண்டு வந்துவிட்டோம்.

இந்தச் சூழலில் ஏதோ ஒரு சம்பிரதாயத்தின் அடிப்படையில் அழைக்கப்படும் மேள தாளக்காரர்கள், மண்டபத்தின் ஏதோ ஒரு ஓரத்தில் யாருக்கு இசைக்கிறோம் என்றே தெரியாமல் இசைத்தபடி இருக்கிறார்கள். அந்த இசை யாராலும் ஆழ்ந்து கேட்கப்படாததாலோ என்னவோ, அங்கே சலசலத்துப் பேசும் மக்களுக்கும், கை பேசி அழைப்புகளை எடுப்பவர்களுக்கும் ஒவ்வாத ஒரு ஓசையாக மாறிப்போய்விடுகிறது. “இவங்க வேற எப்பப்பாத்தாலும் டொம்மு டொம்முனு அடிச்சிக்கிட்டே” என அலுத்துக் கொள்ளும் குரல்கள் மேள இசையைவிட வலுவாய் ஒலிக்கின்றது.

சிவப்பு கிரானைட் தரையில் கால் மேல் மடித்துப் போட்டிருந்த மற்றொரு காலை ஆட்டியவாறு அருகிலிருக்கும் தம் தோழரிடமிருந்து கணேஷ் பீடிக்கட்டை வாங்கி ஒரு பீடியை உருவி நெருப்பு மூட்டி படுத்தவாறே புகையை மேல் நோக்கி ஊத ஆரம்பித்தார்.

முந்திய நாள் மாலை அவர் மண்டபத்திற்குள் நுழையும்போது சாத்தியமோ இல்லையோ தனக்கென்று ஒரு கம்பீர முகமூடியை அணிந்திருந்திருப்பார். அரங்குக்குள் நுழைந்து வாடிக்கையாய் தாம் அமரும் இடத்தில் இரு சதுரப்பகுதியை எடுத்துக்கொண்ட பிறகு மத்தளமோ, நாதஸ்வரமோ மெல்ல மெல்ல சுதி கூட்டி இசைக்கத் துவங்கி, அடுத்தடுத்து என நகரும் போதெல்லாம், அந்த சளசளக்கும் கூட்டத்தின் புறக்கணிப்பை புறந்தள்ளி விரல் வழியோ, மூச்சு வழியோ தான் வழியவிடும் இசையின் சக்கரவர்த்தியாக தன்னை நினைத்திருந்திருப்பார். காலம் காலமாய் பழகிய இசைதான் என்றாலும், அவர் வாசிக்கும் இசையின் ஏதோ ஒரு சொட்டு அவரையே சிலிர்ப்பூட்டியிருக்கும் சாத்தியம் இல்லாமல் போயிருக்காது.

இதோ எல்லாம் நிறைவடைந்துவிட்டது. ஓய்வாய் தரையில் படுத்து பீடி புகைக்கும் அவரிடம் நேற்றிருந்த கம்பீரமும், சக்ரவர்த்தியாய் நினைத்து இசைத்த கணமும்’ மறந்து போய், இதுவும் நான்தான் என தன்னைத் தளர்த்திக்கொள்ளும், ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் கணம்தான் எத்தனை நிஜமானதும் இயல்பானதும்.



நான் இப்படித்தான் என்ற முறுக்குகளே பல நேரங்களில் நம்மை இறுக்கத்தின் பிடிக்குள் சிக்கவைத்து இறுக்கும் கயிற்றை ஈரமாக்கிக்கொண்டே இருக்கின்றது. இப்படியான தளர்வுகள் எத்தனை பெரிய விடுதலை. விழுந்து புரண்டு சிரிக்கவேண்டிய சம்பவங்களுக்கு, நகைச்சுவைகளுக்குக்கூட வீம்பாய் இறுக்கம் பாவிக்கும் மனிதர்களும் இதே உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். தான் கடைப்பிடிக்கும் இறுக்கம் தன் அடையாளம் மற்றும் தனக்கான அந்தஸ்து என்கிறார்கள்.

வழங்கப்படும் வாழ்க்கை இத்தனை இறுக்கம், இறுமாப்பு சுமப்பதற்கா என்ற சுய ஆய்வு அவ்வப்போது நமக்குத் தேவை. தான் பெற்ற பிள்ளைகளிடம் கூட தான் ஒரு அப்பா அல்லது அம்மா என்ற இறுக்கத்தினைக் காட்டும் பெற்றோர்களைப் பார்க்கும்போது பெரும் அயர்ச்சி வந்து சூழ்கிறது.

தன்னை நேசிக்கின்றவர்கள் எப்போதும் தன்னை குதூகலமாக வைத்துக்கொள்ளும் வாய்ப்புகளைத் தவறவிடுவதில்லை. அருகில் ஒலிக்கும் இசை எவரையும் தாளமிட வைக்கும். தாளத்தின் உச்சத்தை உணர்பவர்களை தன்னையறியாமல் ஆடத் தூண்டும். சூழல் மறந்து அந்த இசைக்குச் செலுத்தும் மரியாதை, தானே தன்னை நேசிப்பதற்கு சாட்சியமாக மாறுகின்றவர்கள் இசைக்கேற்ப தெறித்து ஆடத் துவங்கிவிடுகின்றனர்.

துள்ளியடங்கும் ஆட்டம் மனதிற்குள் மிகப்பெரிய ஆசுவாசம் தரும், சூழல் மறந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளல் மனதிற்குள் மிகப்பெரிய துள்ளலைத் தரும்! இந்த வாழ்க்கை சர்வ நிச்சயமாய் கொண்டாட்டத்துக்கு உரியதுதான்.

கடைசியாக சூழல் மறந்து எப்போது உங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டீர்கள் அல்லது மெல்ல ஆட முயற்சித்தீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்!? மனதிற்குள் சாளரம் திறக்கும்… ஒளி பாயும்… காற்றின் சுகந்தமும் கூட!

-

நம் தோழி மார்ச் இதழில் வெளியான கட்டுரை

*

நிழல் நாடகம் - முன்னுரை



சமீபத்தில் சினிமா குறித்த ஒரு உரையாடலில் நண்பர் ”ரோசப்பூ ரவிக்கைக்காரி” பற்றி தாம் இணையத்தில் வாசித்த ஒரு நீண்ட கட்டுரை குறித்து சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தார். கட்டுரையை வாசித்த பிறகுதான், படம் எவ்வளவு நுண்ணிய கூர்மையான விசயங்களை தன்னுள்ளே கொண்டிருந்தது குறித்த ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். நாயகி அணிந்திருந்த ரவிக்கையின் வடிவமைப்பு, ஒரு பெண் வைத்திருக்கும் கைத்தடியில் இருக்கும் குறியீடுகள் என நிறைய சொல்லிக் கொண்டிருந்தார். இடைநிறுத்தி “சரி.. இத்தனை குறியீடுகள் இருப்பது அந்தப் படத்தை இயக்கிய இயக்குனருக்குத் தெரியுமா!?” என்றேன். உரையாடல் அதோடு முற்றுப்பட்டது.

படைப்பில் இருக்கும் சுதந்திரமே படைப்பாளி அதை பொதுவில் வைத்தவுடனே அது பொது சொத்தாகி விடுவதுதான். நல்ல படைப்பும், படைப்பாளியும் தன் படைப்பு குறித்த சகல விமர்சனங்களையும் நேர்மையாக எதிர்கொள்வார்கள். விளக்கம், மறுப்புகளின்றி ஏற்றுக் கொள்ள முனைவார்கள். படைப்பு உருவாகி வெளியாகும் கணத்திலேயே, அது குறித்த விமர்சனங்கள் உருவாகத் துவங்கிவிடுகின்றன. நாட்கள் கரைய அது குறித்து விமர்சனங்களின் எண்ணிக்கையும் தேய்ந்து விடுகின்றன.

காலம் கடந்து நிற்கும் ஒரு படைப்பு, காலம் கடந்து ஒரு விமர்சத்தினை உருவாக்கும்போது தனக்கு புதிய சிறகுகளைப் பூட்டிக் கொள்கின்றது. ஒரு படைப்பை விமர்சனம் மட்டுமே உயிரோட்டத்தோடு வைத்திருக் கின்றனவா எனும் விமர்சனத்திற்கு ஆட்படுத்தினால், அந்த படைப்பு உயிரோட்டமாக இருக்க விமர்சனம் மட்டுமே அவசியமன்று, அது குறித்த நினைவு மீட்டல்களும், உரையாடல்களும் கூட உயிரோட்டமாக வைத்திருக்க முடியும் என்பதை எழுத்தாளர் சித்ரா ரமேஷ் இந்த நிழல் நாடகம் மூலம் நிரூபிக்கிறார்.




தேவதாஸ் தொடங்கி காதல் வரை, தில்லானா மோகனாம்பாள் தொடங்கி அங்காடித் தெரு வரை, பராசக்தி தொடங்கி பாட்ஷா வரை என கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலத்தில் தான் பார்த்த திரைப்படங்கள் குறித்து சித்ராவுக்கே உரிய யதார்த்தமும், நெகிழ்வும், கறாரும் கலந்த நிதானமான, தெளிவான மொழியில் உரையாடுகிறது நிழல் நாடகம்.

பொங்கலின் நினைவுகளில் தொடங்கி சோம நிதியில் நிறைவடையும் மகாநதியும், பெண்ட்தால் வாசனை எப்படியிருக்கும் என நமக்கொரு வாசனையை மூளைக்குள் புகுத்தும் குணாவும் வாசிக்க இனிதான ஒரு அனுபவம்.

பாரதியில் சாயாஜி ஷிண்டே, தேவயானி என பாத்திரங்களின் தெரிவை பாராட்டும் போக்கில், குவளைக் கண்ணனாக வரும் கஜேந்திரனுக்கு வழங்கும் பாவ மன்னிப்புச் சான்றிதழ் நல்லதொரு முடிவுதான். அன்பே சிவம் படத்தில் தன்னை கோரமாக்கிக்கொள்ளும் கமல் சோடாபுட்டிக் கண்ணாடி அணிய மைனஸ் பத்து காண்டாக்ட் லென்ஸ் போட்டு, ப்ளஸ் பத்து கண்ணாடி போடுவது வரையிலான உழைப்பை நியாயமாகக் கொண்டாடுகிறார்.

நடிகர் விஜய்யின் வளர்ச்சி குறித்துப் பேசுகையில் அப்பாவுடன் இணைந்து / அப்பாவைப் பிரிந்து என்ற இரு பதங்களில் நியாயமான ஒரு கோடு போட்டுவிடுகிறார். அதுவும் அப்பாவுடன் இணைந்த காலத்தில் விஜய்க்கு வைக்கப்பட்ட கேமரா ஆங்கிள்கள், சங்கவிக்கு வைத்த கேமரா ஆங்கிள்கள் என்பன குறித்தும் பேசுகிறார். காதலுக்கு மரியாதையில் விஜய்க்கு நிகழ்ந்த நல்ல மாற்றம் குறித்து பேசுவதோடு அங்கிருந்து அதன் மூலமான ‘அன்னியத்தி ப்றாவு’க்கு பயணப்பட்டு ஃபாசில் குறித்தும் அவரின் மஞ்சில் விரிஞ்ச பூக்கள் வரையும் பேசும் சுதந்திரம் வாசிக்க இதமானது.

ஒரு முன்னால் ரவுடியாய் இருந்த, சிங்கப்பூர் டாக்ஸியின் ஓட்டுனரைப் பேசத் துவங்கி, அதிலிருந்து பாட்ஷாவுக்கு நகரும்பொழுது எழுத்து டாப் கியரில் நகர்கிறது. எல்லா ஆண்களுக்குள்ளும் ஒரு விடலைத் தனமான ஒரு ரவுடிப் பையன் இருக்கிறான் என்பதை வாசிக்கும்போது புன்முறுவல் வரத்தான் செய்கிறது.

தில்லானா மோகனாம்பாள் மற்றும் இந்தி மொழி கைட் படங்களைப் பேசுவதோடு அதன் மூலமாய் இருந்த நாவல்களைப் பற்றியும் பேசுகிறார். ஆனந்த விகடனில் தொடராய் வந்த தில்லானா மோகனாம்பாள் கதையில் வந்த உருவங்கள் குறித்த வர்ணனையை வாசிக்கையில் பத்மினிக்கும் அந்த ஓவியத்திற்கும் நிரம்ப இடைவெளிகள் இருந்திருக்கும் என்பது புரிகின்றது. ‘கைட்’ படம் குறித்து அதன் மூலக்கதை ஆசிரியர் ஆர்.கே.நாராயணனின் சாட்டையடி வசனம் படிக்க ஆச்சரியமாக இருக்கின்றது.

மணிரத்னம் ‘சாரின்’ மௌனராக நினைவுகளை சப்தமாகவே மீட்டுகிறார். சிங் பாத்திரத்தையும், வீ.கே. ராமாசாமி பாத்திரத்தையும், மருத்துவமனையில் தாலி உயர்த்திப் பிடிக்கும் காட்சியையும் தன் பாணியில் ஒரு பிடி பிடிக்கிறார்.

தேசிய கீதம் பாடுகையில் வேர்க்கடலை சாப்பிட்டால் அடித்துத் துவைக்கும் தேசப்பற்று என்ற விமர்சனமும், மறதி என்பது காலம் கொடுக்கும் தண்டனை அல்லது வெகுமதி என்ற சிந்தனையும் நிறைய சிந்திக்க வைக்கின்றன.

சிலருக்கு சினிமா பொழுது போக்கு, சிலருக்கு அது ஒரு வடிகால், சிலருக்கு அதுவே வாழ்க்கை. என்னதான் சினிமாவை ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்று அறிவார்ந்து சொன்னாலும், தமிழர்களைப் பொறுத்த வரையில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் சினிமாவிலிருந்து வந்தவர்களே ஆட்சியதிகாரம் செய்யும் வாய்ப்பை மாறி மாறி பெற்று வருகின்றனர். இன்னும் கூட சினிமா மூலம் தங்களை தகவமைத்துக்கொண்டு பெருங்கனவோடு தயார் நிலையில் இருக்கின்றனர்.

சுமார் இருபது படங்களுக்கு மேலான படங்களைசற்று அலசி, நம் வாழ்வோடு ஒப்பீடு செய்து, அதிலிருந்தவர்கள் குறித்து தன் எண்ண வெளிப்பாட்டினைப் பகிர்ந்து என ஒரு நிறைவான அனுபவத்தை சித்ரா ரமேஷ் நிழல் நாடகத்தின் வாயிலாகத் தந்துள்ளார். கடந்த காலங்களில் நினைவிலிருந்து கரைந்து போயிருக்கும் கதைகளையும், காட்சிகளையும் சுகமாய் வாசிக்கும் ஒரு அழகிய அனுபவம் இது.

இன்னும் அவர் விரல் வழியே எழுதப்பட வேண்டிய படங்களும், அதனையொட்டிய அனுபவங்களும் நிறைய இருக்கின்றன எனும் நினைவூட்டலையே அவருக்கான அன்பு வாழ்த்தாகவும், பிரியமான வேண்டுகோளாவும் இங்கு விடுக்கிறேன்.

-