வெறுப்பென்பது வீரமோ, உரிமையோ அல்லது அடையாளமோ அல்ல

மேலோட்டமாகப் பார்த்தால் ‘ஒரே ஒரு வாழ்க்கைதான்’ என்பது பல தருணங்களில் கேட்டுச் சலிப்புற்ற, வெகு எளியதொரு வரிதான். ஆழ்ந்து யோசித்தால் செய்து கொண்டிருக்கும் எத்தனையோ செயல்களை மீளாய்வு செய்யவும், செய்யாமல் இன்னும் விட்டுவைத்திருக்கும் செயல்களை முடுக்கிவிடவும் மிகப் பெரும் ஆற்றல் கொண்ட உண்மை அது.


மனிதர்கள் தம் வாழ்க்கையை மிக அதிகமாக நேசிப்பது வெற்றியடையும் தருணங்களில் மட்டுமேயல்ல. எதன் நிமித்தமாகவோ வாழ்க்கை தன் கையை விட்டுப் போய்க்கொண்டிருக்கின்றது என்பதை உணரும் கொடுங்கணத்தில் வாழ்க்கையை இழக்க மறுக்கும் எண்ணம் வரும்போது, முதலில் பதட்டம் ஏற்படும். அந்தப் பதட்டம் அடங்கி உண்மை புரியும்போது, அதுவரையிலும் இல்லாததொரு நேசிப்பு அதன் மீது கூடும். என்ன செய்தாவது இதனை நான் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் எனும் வேட்கை அது. அந்தக் கணத்தில் நெகிழும் மனம் அதுவரையிலும் வாய்க்காத ஒன்று. அந்தத் தருணத்தின் வேட்கை தோய்ந்த நேசிப்புக்கு நிகரேதுமில்லை.

விவாதிப்பதற்கென்று சில நட்புகள் எனக்குண்டு. எங்கள் சந்திப்புகளில் உரையாடல் விவாதமாகச் செல்லும். அப்படியானதொரு விவாத தருணத்தில் நானும் நண்பரும் எதிரெதிர் புள்ளியில் நின்று பலவற்றைக் குறித்தும் உரையாடிக் கொண்டிருந்தோம். எதிரெதிர் புள்ளியில் நின்று விவாதிப்பதன் மூலம் பல கோணங்களை எட்ட முடியும் என்பதை அறிந்தவர்கள் நாங்கள். எங்களுக்குள் இருந்த ஆழமான புரிதலின் விளைவாக மட்டுமே அப்படியாதொரு உரையாடலை முன்னெடுக்க முடிகின்றது. தண்டவாளம் போல் இணையாமல் நீண்டு கொண்டிருந்த விவாதம் ஒருகட்டத்தில் அதன் நிறைவுப்புள்ளியினை எட்ட, தண்டவாளங்கள் இரண்டும் இணைந்தன. எதிரெதிர் வாதங்கள் வைக்க முடியாமல் இருவரும் ‘ஆமாமா... சரிதான்!’ என ஒப்புக்கொண்ட உண்மையின் பெயர் ‘வெறுப்பு’.

மனிதர்கள் எப்போதுமில்லாத அளவுக்கு ‘வெறுப்பினை’ உமிழத் தொடங்கியிருக்கின்றனர் எனும் புள்ளியில் இருவரும் எதிர்க்கருத்துகள் வைக்காமல் ஆழ்ந்த அமைதியில் நின்று ஒப்புதலாய் தலையசைத்துக் கொண்டோம். அந்த அமைதி மௌனம் கிடையாது. அலையலையாய் அவ்வப்போது வீசும் வெறுப்பின் வாசனையில் நனைந்திருந்த மௌனம்.

நட்பு, உறவு, அமைப்பு, அரசியல், சாதி, மதம், பொருளாதார மாறுபாடு என நீளும் பட்டியலில் சிலவற்றில் ஓரளவு, பலவற்றில் பெருமளவு வெறுப்பு, வேர் பாய்ச்சி கிளை பரப்பியிருப்பது எல்லோருக்குமே காணக்கிடைக்கின்றது. இந்த வெறுப்பின் அடிப்படையில் அவரவர் மனப்பாங்கு ஒருபக்கம் என்றால், மற்றவர்கள் மெல்ல நஞ்சாக ஊற்றுவது மறுபக்கம்.




மனப்பாங்கு என்பதுவும்கூட ஒவ்வொருவரும் காலப்போக்கில் கட்டமைப்பதுதான். தனக்குக் கிடைக்காதவொன்று இன்னொருவருக்குக் கிடைக்கும்போது ஏற்படும் போட்டி, இயலாமை, ஆற்றாமை மிகச் சரியாகக் கையாளப்படவில்லையென்றால், அது அந்த இன்னொருவர் மீது அல்லது அது தொடர்பான யாவற்றின் மீதும் வெறுப்பை விதைக்க ஆரம்பித்துவிடும். வெறுப்பின் வேர்களுக்கும், கிளைகளுக்கும் வேகமும் தாகமும் அதிகம்.

இசைக்கு, ஏதோவொன்றின் எழிலுக்கு, வாசனைக்கு, நெகிழ்த்தும் சொல்லுக்கு மயங்காதோர் உண்டா?. எதுவெல்லாம் பிடித்ததாக மனம் ஏற்றுக்கொண்டு மூளையில் பதிவாகின்றதோ, அவற்றையெல்லாம் நிபந்தனைகளின்றி ஏற்றுக்கொண்டு அதன் வசியத்தில் கிறங்கிப் போவதென்பது உயிரிகளுக்கேயுரிய எளியதொரு அம்சம்தான்.

கட்டமைக்கப்படும் பிம்பமாகினினும், அவதூறாகினும் எளிதில் வசப்பட்டுவிடுவார்கள். தனக்கு நேசிக்க ஒன்று கிடைத்தால், அத்தோடு நிற்கவியலாது. தான் நேசிக்கும் ஒன்றின் எதிர்நிலையில் உள்ளதன் மீது வெறுப்புக் கணைகளை வீசுவதையும் தம் நேசிப்பின் அங்கமெனக் கருதுவதுண்டு.

யாரோ அல்லது எதுவோ ஊட்டிய வசியத்தில் சிக்கி இடைவிடாது, இதுஅதுவென எந்த வரைமுறைகளுமற்று தன்னைச் சுற்றிலும் இருக்கும் எல்லாவற்றின் மீதும் வெறுப்பை உமிழ்கின்றவர்களை நீங்களும் கண்டிருக்கலாம். எல்லாவற்றிலும் ‘இதுவென்றால் இப்படித்தான் இருக்கும், அதுவென்றால் அப்படித்தான் இருக்கும்’ என்பதாக முன்முடிவோடு அணுகி, அதன் மீது வெறுப்பினை பாய்ச்சி அதிலொரு அதீத போதை உணர்வதை நிறையக் காணலாம்.

மனப்பாங்கு சரியாக அமையாமல் போவதற்கு தன்னைக் குறித்த ‘தாம் யார் எனும் சுய உணர்தல்’ இல்லாததுவும் மிக முக்கியமான காரணம். தன்னைக்குறித்த சுய உணர்தலற்றவர்கள் இந்த வசியத்தில் எளிதாக தம் வசம் இழப்பார்கள். தம் வசம் இழந்து பிறிதொன்றின் வசம் சென்றால், அது ஆட்டுவிக்கும். இதுதான் நான் என தன்னை வரையறை செய்துகொள்வதன் மூலமாக அந்த வெறுப்புணர்வு சுரக்கத் தொடங்கும்போது, வரையறைக்கு உகந்ததுதானா இதுவெனக் கேள்வியெழுந்தால் வெறுப்பின் வேர்களில் வெந்நீர் பாய்ச்சிவிட முடியும்.

வெறுப்பின் நிழல் பிறரை மட்டுமே தீண்டுவதாகத் திருப்தியடைவோர் புரிந்து கொள்ளாத கசப்பான உண்மை, அதன் வேர்கள் தம் ஆன்மாவில் நீண்டு உயிர் பருகுவதை. வெறுப்பின் தன்மையை தாம் ஒருபோதும் அனுபவிக்காமல் எவரொருவருக்கும் வழங்கிவிட இயலாது. எப்பொழுதெல்லாம் வெறுப்பு வெளியேறித் தீண்டுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அது உள்ளே கசிந்து, பரவத்தான் செய்யும். அந்தப் பரவலில் மடிந்துபோன நேசத்தின் வேர்களை அறியாதது மிகப் பெரிய விந்தையல்ல. நேசத்தின் வேர்கள் மடிந்துபோகும்போதெல்லாம் மனம் என்னவாகும்? சிதைவைத்தான் சந்திக்கும். மெல்ல மெல்ல மனம் சுருங்கும், இறுகும், கருகும். ஒருகட்டத்தில் அது நோய்மையுறும்.

பலரும் என்னிடம் பேசுவதுண்டு, நானும் கேட்பதுண்டு. சிலவற்றை ஏற்றுக்கொள்ளவதில் பெரும் சவால் உண்டு எனக்கு. குறிப்பாக ஒரே கூரையின் கீழ் மிகப் பெரும்பாலான பொழுது வாழும் தம்பதிகள் ’நாங்கள் பேசிக்கொள்வதில்லை’ எனச் சொல்வதை மனச் சமநிலையோடு என்னால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை.

மனிதர்களற்று மனிதர்களால் வாழ்ந்துவிட முடியாது. அதன் நிமித்தமாக எங்கெங்கோ மனிதர்களைத் தேடிக்கொண்டேதான் இருக்கின்றோம். நான்கு சுவற்றுக்குள் உடனிருப்போரிடம் உரையாடலுக்கு இடப்பட்ட முடிச்சுகளை அவிழ்க்க மறுக்கின்றனர். பேச்சை விடுங்கள், பார்வைப் பரிமாற்றங்கள்கூட இல்லாமல் காலத்தை நகர்த்துவதற்கு அவர்கள் சொல்லும் சமாதானங்கள் வெற்றுச் சொற்கள் மட்டுமே.

என் நண்பரின் நண்பரொருவர் தம் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கொடுங்காலத்தில் இருக்கின்றார். ஒருபக்கம் நம்பிக்கையோடு போராடினாலும், மறுபக்கம் மரணம் எனும் உண்மையை தான் தவிர்க்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள மனதளவில் தம்மை தயார்படுத்திக் கொண்டுவிட்டார்.

அந்த நண்பரின் உரையாடல்கள் சில அவ்வப்போது என்னிடம் பகிரப்படுவதுண்டு. அவர் குறித்த பழைய பிம்பங்கள் நிறைய உண்டு. அது அவரின் காலமாக இருந்த அத்தியாயங்களில் நிகழ்ந்தவை. இது அவருடைய காலம் அல்ல. இறுதி அத்தியாயத்தின் கடைசிச் சொல் எதுவென்று கண்ணாமூச்சி ஆடும் மனிதனிடம் பழைய பிம்பங்களின் எச்சம்கூட இல்லை. பகிரப்பட்ட உரையாடல்களில் ஆழ்ந்து ஆழ்ந்து வாசித்ததில் நான் கண்டடைந்தது, அவர் வெறுப்புணர்வின் கூறுகள் அனைத்தையும் முற்றிலுமாகக் கைவிட்டிருப்பதை உணர முடிகின்றது. ஒருவேளை அவர் நலமோடு இயல்பான வாழ்க்கையில் இருந்திருந்தால், இந்த மனநிலை வாய்த்திருக்குமா என்றும் யோசிக்காமல் இல்லை.

கிடைத்திருக்கும் ஒரே ஒரு வாழ்க்கையில் எத்தனையோ நிறைவேறாமல்தான் போகின்றன. அதற்கான முக்கியக் காரணம் ஏதோவொரு போதாமை. அது நேரமாகவோ, மனமாகவோ அல்லது அறியாமையாகவோ இருக்கலாம். இத்தனை போதாமைகள் இருக்கும்போது, வெறுப்பிற்காக எப்படி நம்மால் தனித்து நேரமும், மனமும், ஆற்றலும் ஒதுக்க முடிகின்றது. நாம் அப்படியாகவே வழிவழியாகப் பழக்கப்படுத்தப்பட்டு விட்டோமா?

வெறுப்பு என்பது வேறொன்றுமில்லை. அதுவும் ஓர் உணர்வுதான். இந்த உணர்வு வேண்டுமா, வேண்டாமா எனும் தெளிவு வந்துவிட்டால் போதும். முயற்சித்தால் மெல்ல மெல்ல கட்டுக்குள் வைக்கும் உணர்வுதான். ஆனால் முயற்சிக்கும் முடிவுதான் இதில் மிகப் பெரிய சவால். இதை முன்னெடுக்க ‘தான் யார்!’ எனும் சுய அடையாளம் அறிந்திருப்பது மிகப் பெரிய அளவில் உதவும். ’தாம் வெறுப்பு உணர்வற்றவர்’ எனும் சுய நிலைப்பாடு வெறுப்பின் திசை நோக்கி வேர் நுனி பயணிக்க முற்படும்போதெல்லாம் டேக் டைவர்சன் என மாற்றுப்பாதைக்கு வழி காட்டும்..

எல்லாவற்றையும் அதனதன் இயல்பில் புரிந்துகொள்தல், மனிதர்கள் அப்படியும்தான் இருப்பார்களென ஏற்றுக்கொள்தல், வெறுப்பால் எதையும் எட்ட முடியாது எதும் தெளிவு, தாம் விடுபடும் பொருட்டு இன்னொருவரை மன்னித்தல் என்பதுள்ளிட்டவைகளாலும் வெறுப்பு மனநிலைகளிலிருந்து மெல்ல விடுபட முடியும்

வெறுப்பென்பது ஒருபோதும் வீரமோ, உரிமையோ அல்லது அடையாளமோ அல்ல, அது அவரவரை சுயமாக மாய்க்கும் பெரும் பிணி.

- ஈரோடு கதிர்

இந்தப் பிள்ளைங்க எப்படித்தான் வாழப்போறாங்களோ!

பொதுவாகவே மனிதர்கள் வாய்ப்புக்கிடைக்கும் தருணங்களில் சக மனிதர்கள் குறித்து மீது ஏதேனும் ஒரு காரணத்தை முன் வைத்து புகார் சொல்பவர்களாவே அறியப்படுகின்றனர். தமக்கு சமமாக இருக்கும் மனிதர்களின்பால் அப்படியான புகார்கள் இருப்பதொன்றும் பெரும் ஆச்சரியம் தருவதில்லை. ஆனால் நாற்பது முதல் அறுபதுகள் வரை வயது கொண்டோர் தற்போது அடுத்தடுத்த தலைமுறைகளாக இருக்கும் பதின் பருவம் மற்றும் இருபதுகளில் இருப்போர் மீது ஏன் கை நிறைய புகார்களை வைத்துகொண்டு போகுமிடமெல்லாம் பரிமாறுவதை பல தருணங்களில் பாத்திருப்போம். என்ன வகையான புகார்கள் என்பவை நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்தப் புகார்களைக் கடந்து அவர்களிடம் கற்றுக்கொள்ள நமக்கு எதுவுமே இல்லையா எனும் கேள்விக்கான விடைதேட ஆரம்பித்தால் வேறொரு உலகம் நமக்கு வசப்படும்.

ஒருதலைமுறையினரை குறிப்பிட்ட எல்லைகளைத் தாண்டவிடாமல் வைத்திருந்த சில வெற்று நம்பிக்கைகளையும், காரணமற்ற கட்டுப்பாடுகளையும், தேவையற்ற திணிப்புகளையும் எளிதில் கேள்விக்குட்படுத்தும் தலைமுறையினராக அவர்கள் இருப்பதுவே பல நேரங்களில் அவர்களிடமிருந்து முரண்பட வைக்கின்றது என்பது அவர்கள் பிழை மட்டுமே அல்ல.

இந்த முரண்பாடுகள் முளைக்கும் தருணங்களில், தம்மோடு இணக்கமாக உரையாடி புரிதலை ஏற்படுத்த முனையும் மூத்த தலைமுறையோடு எளிதில் ஒட்டிக்கொள்கின்றனர். அவர்கள் குரல் இவர்களின் செவிகளில் நுழைகின்றது. அதேசமயம்நாங்கள் சொல்வது மட்டும்தான் சரிஎனும் தலைமுறையோடு அவர்கள் பெரிதாக பிணக்கு எதுவும் கொள்வதில்லை, மிக அமைதியாகப் புறக்கணிக்கின்றனர். சப்தமின்றி அறைக்கதவையும், மனக்கதவையும் மூடி தாழிட்டுக்கொள்கின்றனர். அமைதியான புறக்கணிப்பு என்பதைப் பழக்கப்படாத மூத்த தலைமுறை இயல்பாகவே பதட்டம் கொள்கின்றது.

இப்படியாக பதட்டமடையும் தலைமுறையினரிடம் நான் தன்மையாக எடுத்துச் சொல்வது, முதலில் பதட்டத்தைக் குறையுங்கள் என்பதைத்தான். அப்படிச்சொன்னது, இயல்பாகவே இந்த வயதில் பதட்டம் வருகின்றது என்கின்றனர். புன்னகையோடு அவர்களிடம் வலியுறுத்தலாகச் சொல்வது, இந்த வயதில் பதட்டம் கொள்ளாதீர்கள் என்பதைத்தான்.




இந்த உலகம் தோன்றிய காலம் முதற்கொண்டு தன்னை மாற்றிக்கொண்டேயிருக்கின்றது. இந்த உலகத்தில் உள்ளவைகளும், அந்த மாற்றங்களுக்கு ஏற்ப தம்மைத் தகவமைத்துக்கொண்டே வந்திருக்கின்றன. அப்படி தகவமைக்கும் தன்மை கொண்ட எதுவும் முற்றிலுமாக வீழ்ந்துவிடுவதில்லை. மனித குலத்தின் மிகப் பெரிய சிறப்பம்சமாக நான் உணர்வது அப்படியான தகவமைப்புத் தன்மையை தன்னில் கொண்டிருப்பதுவே.

ஆகவே, தம்மிடம் இருக்கும் அளவுகோல்களை மட்டுமே வைத்துக் கொண்டு, ‘இந்தப் பிள்ளைங்க எப்படித்தான் வாழப்போறாங்களோ!’ என ஆரம்பிக்கத் தேவையில்லை. முந்தைய தலைமுறைகளும் இதே சொற்களை வெவ்வேறு வடிவங்களில் ஒருகட்டத்தில் பயன்படுத்தியிருக்கும் சாத்தியமுண்டு.

ஒருதலைமுறையில் மிக மிகக் கடினமாக இருந்தவொன்றை இன்னொரு தலைமுறை நொடிப்பொழுதுகளில் மிக எளிதாக கையாள்கின்றது மறுக்க முடியாத நிதர்சனம். பல தருணங்களில் நான் சொல்லும் உதாரணம் ஒன்றை இங்கு சுட்ட விரும்புகின்றேன். ஒருகாலத்தில் தொலைபேசி கட்டணம் செலுத்துவதற்காக சில மணி நேரம் வரிசையில் நின்றிருந்தது இன்றும் நினைவில் இருக்கும் என நம்புகிறேன். இன்று மொபைல் ஃபோன் ரீசார்ஜ் என்பது சில நொடிகளில் அந்த மொபைல் வழியாகவே நடந்துவிடுகின்றது. இதுபோல் அன்று-இன்று எனப்பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டேயிருக்கும். இந்த இரண்டு அனுபவங்களையும் தம் முதல் அனுபவமாக உள்வாங்கும் இருவேறு தலைமுறைகளுக்கான மன இடைவெளிதான் முரண்பாடுகளுக்கான முதல் விதையாக இருக்கின்றது.

எதுவும் அதற்கான நிதானத்தோடும், பொறுமையோடும்தான் நிகழ வேண்டும் என்பதை தம் கொள்கையாக வைத்திருப்போருக்கும், உடனே நிகழும் சாத்தியங்களை கைக்கொள்வோருக்கும் இடையே இடைவெளியொன்று இருந்தே தீரும் என்பதை புரிந்துகொள்ளும் பொறுப்பு யாருக்கு அதிகம் இருக்கும் என்பதை உணர்ந்துவிட்டால் போதும்.

நான் கண்ட வரையில் இளம் தலைமுறை முன் தீர்மானத்தோடு இருப்பதில்லை. தம் கோபத்தை நீண்ட நேரம் வைத்து வளர்த்துக்கொண்டிருப்பதில்லை. தம் தேவைக்குயாரும் எதும் சொல்லிடுவாங்களோஎனத் தேவையற்ற பயம் கொண்டு தயங்கிக் கொண்டிருப்பதில்லை. கால மாற்றத்தில் கிடைக்கும் அனைத்துப் புதிய மாற்றங்களுக்கும் பொருந்தும் தன்மையுடையவராக இருக்கின்றனர். உறவுகள் பேணுவதில் தேவையற்ற பசப்புத் தன்மையை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. இந்தப் பட்டியல் நீண்டு கொண்டேயிருக்கும்.

அப்போ அவர்களிடம் குறைகளே இல்லையா எனும் கேள்வி எழுந்தால் தயவுசெய்து முதல் மற்றும் இரண்டாவது பத்திகளை இன்னொரு முறை வாசிக்க  அன்போடு வேண்டுகிறேன்.

இளம் தலைமுறைகள் குறித்த பதட்டங்களிலிருந்து மீள்வதற்கு நான் பாவிக்கும் முறை, அவர்களின் உலகத்தை அறிந்துகொள்ள முற்படுவதே. அதை அத்தனை எளிதில்லை என்றாலும் தொடர்ந்து முயன்று கொண்டேயிருப்பது மிகவும் தேவையான ஒன்று.

இணைந்து இனிதே பயணிப்போம்!

பலரை இழிவு செய்து உணர்த்தப்படும் மனிதாபிமானம் கொடூரமானது

சிலருக்கு இந்தப் பதிவு பிடிக்காமல் போகலாம். அவர்கள் மனம் அமைதியுற முன்னதாகவே வேண்டிக்கொள்கிறேன்.

* மதுரையிலிருந்து இரவில் காரில் பயணம் துவங்கவுள்ள நிலையில் மகள் கழிவறை செல்ல வேண்டுகிறாள். அனுமதிக்க மறுத்து தந்தை அழைத்துச் செல்கிறார். வழியில் மிக மோசமான விபத்தைச் சந்திக்கிறது அந்தக் கார். இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர். அம்மா மற்றும் ஓட்டுனருக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. மற்ற யாருக்கும் எந்த முதலுதவிகூட அளிக்கப்படவில்லை. ஆபத்தான நிலையில் இருக்கும் அம்மாவை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அங்கிருக்கும் மருத்துவர் பணிக்கிறார். சுமார் காலை 8 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அங்கிருந்து புறப்படுகின்றனர். வழியில் உடல் நிலை மோசமடைகின்றது. ஆம்புலன்ஸ் நிறுத்தப்படுகின்றது. தாய் இறந்து போகிறார். மீண்டும் ஆம்புலன்ஸ் மதுரை நோக்கி புறப்படுகின்றது. அவர் இறந்ததை உறுதிப்படுத்த வழியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையை அணுக, அங்கிருக்கும் மருத்துவர் உறுதிப்படுத்துகிறார். அப்போது அந்தப் பெண் உதவிசெய்ய வந்த நாயகனிடம் இந்தியில் 'கழிவறை எங்கு இருக்கு?’ என்று கேட்கிறார்.
* தீபாவளி தினத்தில் காலை 11 மணி சுமாருக்குத்தான், C2 பெருங்குடி காவல் நிலையத்தில் மாமூலாக வந்த ஸ்வீட் பாக்ஸ்கள் பங்கு பிரிக்கப்படுகின்றன. பிணம் ஒன்றினை விமானத்தில் நேரடியாக அனுப்ப முயன்ற ஒரு கும்பலை விசாரிக்க வேண்டிய சூழலில் கைதி ஒருவரை ஆடிப் பாடவிட்டதோடு காவல்நிலையத்தையே ஆடவிடுகிறார் இன்ஸ்பெக்டர்.
* உடற்கூறாய்வு முடிந்து உடலை ஒப்படைக்கும்போது பிணவறை ஊழியர் ”தீபாவளி பார்த்துக் கவனிங்க!” எனத் தலையைச் சொறிகிறார். நாயகனிடம் காசு இல்லை, நாயகனின் நண்பனிடமும் காசு இல்லை, அம்மாவின் சவத்தின் முன்னே குழந்தை உண்டியலை உடைத்து காசை அள்ளிக்கொண்டு வந்து தர, அந்த ஊழியர் அதை அப்படியே இரண்டு கைகளாலும் வாங்கிக் கொள்கிறார்.
Ayothi (அயோத்தி) திரைப்படத்தில்தான் மேலே குறிப்பிட்ட காட்சிகள் வருகின்றன.
** குறிப்பிட்ட முதற்காட்சியில் இரவில் ரயில் நிலையத்திலிருந்து காலை சுமார் ஒன்பது மணி வரைக்கும் அந்தப் பெண் சிறுநீர் கழிக்காமல் (சாட்சிக்கு... அப்பா முந்தையை இரவில் மகள் கேட்டதை நினைத்துப் பார்க்கிறார்) இருந்திருக்கிறார் என ஒருவேளை உணர்த்த முயன்றதாக இருந்தால் அது இயல்பான சென்டிமென்ட் வகை அல்ல, அந்தப் பாத்திரத்தின் மீது கொடூரமான பச்சாதாபத்தை திணிக்க முற்படும் வக்கிரமான சென்டிமென்ட் மட்டுமே!
** தீபாவளி தினத்தன்று காவல் நிலையத்தில் ஸ்வீட் பாக்ஸ்கள் பங்கு பிரித்தல், இன்ஸ்பெக்டர் கொளுந்தியாவுக்கு பங்கு, கைதியை அழைத்து காலை நேரத்தில் ஆடிப்பாட விடுவதெல்லாம் எதன் பொருட்டு இந்தக் கதையில்? தன்னை அடித்துவிட்டதாக ஒரு கம்பவுண்டர் புகார் தெரிவித்த பிறகும், எந்த அலைக்கழிப்பு இல்லாமல் தங்கள் கடமையை(!) காவல்துறை செய்ததுதானே. 04.11.2021 காலகட்டத்திலும் சிக்கலான ஒரு கேஸ் தொடர்பான ஐந்து பேரையும் காவல் நிலையத்தில் அமர வைத்துக்கொண்டே இன்ஸ்பெக்டர் அந்த ஆட்டம் போடுகிறார் என்பதன் மூலம் இயக்குனர் சொல்ல வருவது என்ன?
** பிணவறை உள்ளிட்ட சில இடங்களில், ஊழியர்கள் 'பார்த்து செலவுக்கு கொடுங்க!’ என்று தலை சொறிவதோ அல்லது சில இடங்களில் வற்புறுத்தி வாங்குவதோ அங்கொன்றும் இங்கொன்றும் நடப்பதுதான். ஆனாலும் அம்மாவின் பிணத்தின் முன்னே உண்டியலை உடைத்து கைகளில் பணத்தை அள்ளிக்கொண்டு வந்து ஒரு குழந்தை கொடுப்பதை இரண்டு கைகளிலும் ஏந்திக்கொள்ளும் அளவுக்கு அவர்களெல்லாம் மனிதாபிமானம் இல்லாதவர்களாக இருக்கவே மாட்டார்கள். இந்தக் காட்சியை வைக்க எவ்வளவு பெரிய கல் நெஞ்சம் வேண்டும்!
2011ம் ஆண்டில் எழுத்தாளர் மாதவராஜ் எழுதிய 'அழக்கூட திராணியற்றவர்களாய் அவர்கள்' எனும் உண்மைச் சம்பவ பதிவில் திரு.சாமுவேல் ஜோதிக்குமார், திரு.சுரேஷ்பாபு ஆகியோர் செய்த உதவியை அடிப்படையாகக் கொண்டுதான் (களவாடி) திரைக்கதை அமைத்துள்ளனர். (பதிவு இணைப்பு முதல் பின்னூட்டத்தில்)
அந்தப் பதிவைப் படிக்கும்போதே மனம் கனத்துப்போகும், கண்ணீர் துளிர்க்கும். அதில் பின்னூட்டமிட்ட பலரும் அந்த மனிதநேய உதவியில் நெகிழ்ந்துருகியிருக்கின்றனர். யாரென்றே அடையாளப்படுத்தப்படாத வினோத் ஸ்ரீவத்சவா குடும்பத்திற்கு சாமுவேல் ஜோதிக்குமார், சுரேஷ்பாபு ஆகியோர் பலவகைகளில் முயன்று உதவிவிட்டு, “தோழா! தாங்க முடியல” என்று குரல் உடைந்து போனது எத்தனை உருக்கமானது!
குறிப்பாக இந்த நிகழ்வுகள் //“நீங்க யாரும் சாப்பிடல. தயவு செய்து விமானத்தில் கொடுக்கும் ஸ்னாக்ஸையும், டீயையும் சாப்பிட வேண்டும்” என தோழர் சுரேஷ்பாபு கேட்டுக்கொண்டிருக்கிறார் . அதற்குமேல் விருந்தினர்கள் செல்லமுடியாத பகுதி வந்ததும், மூத்த மகள் மோனிகா சட்டென்று சாமுவேல் ஜோதிக்குமாரின் கால்களில் விழுந்து ஓவென்று வெடித்து குலுங்கியிருக்கிறார். வினோத் ஸ்ரீவத்சவா சுரேஷ்பாபுவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு “நீங்க எல்லாம் யார் சார். எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் ஹெல்ப் பண்ணனும் ? நீங்க வரவில்லையென்றால் எங்கள் நிலமை என்ன சார்” என்று கதறி அழுதிருக்கிறார். ஏர்போர்ட்டில் இருந்த அனைவரும் இந்தக் காட்சியைப் பார்த்து உறைந்துபோக, சாமுவேல் ஜோதிக்குமார் சுதாரித்து, அவர்களை எழுப்பி, “இதுல என்ன இருக்கு சார். எங்களால் இதுதான் முடியும். உங்க துயரம் அவ்வளவு பெரியது. நாம எல்லாம் மனுஷங்கதானே” என்று சொன்னாராம். வினோத் ஸ்ரீவத்சவா கண்ணீர் பெருக விடைபெற்றிருக்கிறார்.//
படத்தின் நோக்கம் என்ன...?
மொழி தெரியாத இடத்தில் எதிர்பாராத சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது, கடும் இழப்பைச் சந்திக்கும்போது மனித நேயத்தோடு உதவ வேண்டும்... இதைத்தானே படம் வலியுறுத்துகின்றது.
அந்தக் குடும்பத்தலைவனை அநியாயத்திற்கு வில்லன் ஆக்காமல், படம் நெடுகிலும் கம்பவுண்டர், இன்ஸ்பெக்டர், பிணவறை ஊழியர், மருத்துவக்கல்லூரி டீன் வீட்டு செக்யூரிட்டி, ஏர்-கார்கோ ஆபிஸர் என்று அத்தனை பேரையும் அல்பமான மனிதர்களாக்காமல் அந்தப் பதிவில் கடத்திய உணர்வை காட்சிப்படுத்தலில் சிறப்பாக கடத்திவிட முடியாதா என்ன?
இலங்கையில் நான் பாஸ்போர்ட் தொலைத்தபோது, விமான நிலையை காவல் நிலையத்தில் இருந்த ஒரு சிங்களக் காவலர் தன்மையோடு அனைத்து உதவிகளையும் செய்து, செல்ஃபோன் எண் கொடுத்து மேலும் உதவிகள் தேவை என்றால் அழையுங்கள் என்றார். கொழும்பு இந்திய தூதரகத்தில் காவல் பணியில் இருந்த மேற்கு வங்கத்தைச் சார்ந்த ஒரு மத்திய படை காவலர் மிகுந்த அன்போடும் கனிவோடும் என்னிடம் நடந்துகொண்டார். கோரோனா காலத்தில் மாவட்டம்விட்டு மாவட்டம் தாண்ட முடியாத கெடுபிடி இருந்தபோது, மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை கொல்கத்தாவில் இருந்து திருப்பூருக்கு பேருந்தில் தனிப்பட்ட முறையில் ரிஸ்க் எடுத்து ஒரு ஐபிஎஸ் அதிகாரி அனுப்பி வைத்தார். மனிதர்களிடமிருந்து மனிதம் அப்படியொன்றும் மங்கிப்போய்விடவில்லை.
இந்தக் கதை முற்றிலும் கற்பனையாக இருந்திருந்தால் மனம் உருகி அடடா என்றிருக்கலாம். இப்போதும் மனம் உருகாமல் இல்லை.
’மொழி தெரியாத இடத்தில் இழந்து தவிப்போர்’ குறித்து சசிக்குமார் இரண்டு முறை பேசும் வசனம் அத்தனை தரம். எவரையும் உலுக்கக்கூடிய ஒன்று. அந்த மகள் பாத்திரத்தில் மிகச் சிறப்பானதொரு நடிப்பின் மூலம் அந்தப் பெண் வென்றெடுக்கிறார். மேலோட்டமாக ரசித்துக் கடக்க வேண்டுமென்றால் நல்ல படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நடந்தவை நடந்தவிதமாக மட்டுமே இருந்து, திணிப்பு காட்சிகளும் செயற்கையான சென்டிமென்ட் காட்சிகளும் இல்லாமல் இருந்திருந்தால் தரமான உலகப்பட வரிசையில் வைக்க வேண்டிய கதைதான்.
ஆனால் உண்மைச் சம்பவம் ஒன்றின் வழி நெடுகிலும் மனிதர்களைக் கோரமாக்குவதன் நோக்கம் மட்டும் புரியவேயில்லை. ஒரு மனிதாபிமானத்தை உயர்த்திக்காட்ட பலரை இழிவு செய்யும் உள்நோக்கம் மிகக் கொடூரமானது.

யாருக்கோ நிகழ்ந்தால் ஒரு நீதி, தமக்கு நிகழ்ந்தால் ஒரு நீதி - Iratta


Iratta - மலையாளம் (Spoiler Alert)
படம் பார்த்த பலருக்கும் இறுதிக்காட்சியின் அதிர்ச்சி மிகக் கனமானதாக இருப்பதாக உணர முடிகின்றது.
அது 'எது’ சார்ந்த அதிர்ச்சி என்பது குறித்துத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
வழக்கமான மலையாள த்ரில்லர் வகை. DySP பிரமோத் - ASI வினோத் ஆகிய இரட்டையர் பாத்திரங்களிலும் ஜோஜு ஜார்ஜ் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் என்பதையெல்லாம் சொல்ல வேண்டிய கட்டத்தை அவர் தாண்டிவிட்டார்.
மாலினியாக வரும் அஞ்சலியின் மீள் வருகை, அஞ்சலிக்கு இனி வாய்ப்புகள் கிடைக்கும் எனும் நம்பிக்கையைத் தருகின்றது.
மற்றபடி த்ரில்லர்கள் முடிக்கும்போது அவ்வளாக தொடர்பில்லாத, எதிர்பாராத ஒன்றில் கொண்டு வந்து முடிப்பார்கள். இதில் சற்றும் எதிர்பாராவண்ணம் சுருக்கென தைக்கும் ஒரு புள்ளியில் முடித்திருக்கிறார்கள். அந்தப் புள்ளிதான் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றது.

”நான் பேசி முடிக்கும்வரை போன் கட் பண்ணிடாதே, 17 வருசம் ஆகிடுச்சு. எல்லாத் தப்பும் என்னோடதுதான். அதோட கணக்குவழக்கு எதும் வச்சுக்கல. மகள டிவில பார்த்துட்டு இருக்கேன். கம்பீரமா இருக்கா. உங்க ரெண்டு பேரையும் பார்க்கனும். அவகிட்ட என்னைப் பத்தி சொல்லிவை. அவளோட அப்பன் உயிரோட இருக்கானு தெரியும் உரிமை அவளுக்கு உண்டு” என பிரிந்துசென்ற அதுவரை பேசாதிருந்த மனைவியிடம் வேண்டும் பிரமோத்துக்கும்...

ஒரு நாள்கூட முடிவடையாத நிலையில், மகளுடன் சந்திக்க வருகிறோம் எனச் சொல்லும் அதே மனைவிடம் “வர வேண்டாம். மகள்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். அவள் எதுவும் தெரிஞ்சுக்க வேண்டாம். அவள் என்னோட முகத்தைப் பார்க்க வேண்டாம். இனி எப்பவும் என்னைக் கூப்பிட வேண்டாம்.” என உறுதியாக, இறுதியாகச் சொல்லும் பிரமோத்துக்கும்...

இடைப்பட்ட தருணத்தில் அறிய வந்ததுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம்.

*

காவல் நிலையத்தில் உடன் பணிபுரியும் இரண்டு பேரின் வாழ்விலும் வினோத் செய்தது, செய்ய முனைந்தது மற்றும் பினீஸ் சொல்லும் அந்த லாட்ஜ் நிகழ்வு அனைத்தும் வழக்கமான சினிமா வில்லன் செய்வதுதானே!

வினோத் பிரமோத்தின் மனைவி மற்றும் கைக்குழந்தையாக இருக்கும் மகளை எந்த உணர்வுகளுமற்றவனாகச் சந்திக்கிறான். பிறகு பிரமோத்திடமே எள்ளி நகையாடுகிறான்

மாலினியின் பிரச்சனையில் அவள் ‘அழகான பெண்’ என்பதற்காகவே தானே வலிய வந்து உதவுகிறான். அவளை மருத்துவமனையிலிருந்து அழைத்து வரும் நோக்கம் மற்றும் அந்த முதல் ’முயற்சி’யையும் நாம் அறிந்தே இருக்கின்றோம்.

இவை யாவும் ‘வில்லன்’ எனப்படும் வினோத் மீது வெறுப்பை, கோபத்தை, எரிச்சலை உண்டாக்கவே செய்தன.

இதன்பிறகு, வரும் காட்சிகளில்...
மும்பையில் பிரமோத் மனைவி-மகளைச் சந்தித்துவிட்டு திரும்பும் முன், சந்திப்பில் குழந்தைக்கென்று சில பொருட்களை வாங்கித் தந்துவிட்டு வருகின்றான்.

அந்த முதல் ‘முயற்சி’யால் மிரண்டோடும் மாலினியை தேடி அழைத்து வருகிறான். வேறொரு முகம் காட்டுகிறான். அவள் வேலை செய்யும் அங்கன்வாடி வகுப்பறையைக் கூட்டிவிடுகிறான். புடவை வாங்கித் தருகிறான். நெகிழ் மனதோடு தம் வாழ்க்கை முழுவதும் அழுக்கு என ஒப்புதல் தருகிறான். முன்பாக ஒரு மான்டேஜ் பாடல் உண்டு.

இவைகளுக்குப் பிறகு, அதுவரை வினோத் மீதிருந்த வெறுப்பு, கோபம், எரிச்சல் தணியவே செய்கின்றன.

அவனை அவன் கீழ்மைகளோடு ஏற்க(!) மனம் துணிகின்ற தருணத்தில்தான், அந்த க்ளைமாக்ஸ்.
பொதுவாகவே, எந்தவொரு குற்றமும், யாருக்கோ எனும்போது ஒரு மாதிரியும், தன்னைச் சார்ந்தவர் எனும்போது வேறொரு மாதிரியும் வடிவம் பெற்றுவிடுகின்றது. அதுதான் வினோத்திற்கும்!

ஆனால், மூன்றாவது துப்பாக்கிக் குண்டில் அங்கே செத்தொழிவது வினோத்தாக இருந்தாலும், செத்தொழிய வேண்டியது, 'யாருக்கோ நிகழ்ந்தால் ஒரு நீதி, தமக்கு நிகழ்ந்தால் ஒரு நீதி!’ என்றிருக்கும் எல்லா மனநிலைகளும்தான்.

போதைப் பழக்கத்தால், பணி அழுத்தத்தால், மன உளைச்சலால் என ஏதோ ஒரு காரணம் சொல்லி முடித்துவைக்கப்படும் தற்கொலை வழக்குகளின் பின்னே உண்மையில் இருக்கும் காரணங்கள் யாரும் அறியாத, யாரும் தாங்கவியலாத அளவுக்கு கொடூரம் நிறைந்ததாகவும்கூட இருக்கலாம்.
*